பக்கிங்காம் கால்வாயை சீரமைக்காவிட்டால் வரலாற்று புத்தகத்தில் மட்டுமே இருக்கும்: ஐகோர்ட்டு வேதனை

பக்கிங்காம் கால்வாயை முறையாக சீர்படுத்த வேண்டும் என்றும், இல்லாவிட்டால் வரலாற்று புத்தகத்தில் மட்டுமே கால்வாய் பற்றிய பதிவுகள் இருக்கும் என்றும் சென்னை ஐகோர்ட்டு வேதனை தெரிவித்துள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

சென்னை,

நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி பாதுகாக்க உத்தரவிடக் கோரி வழக்கறிஞர் சுதர்சனம் சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். அவர் அளித்திருந்த மனுவில், நீர்நிலைகள் முறையாகப் பராமரிக்கப்படவில்லை. இது குறித்து பலமுறை மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. மாதாவரம் கிராமத்தில் 1.17 ஹெக்டேர் பரப்பிலான ஏறி ஆக்கிரமிக்கப்பட்டு உள்ளது. அதனை அகற்ற உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தார்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி மற்றும் நீதிபதி ஆதிகேசவலு ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. மாநகராட்சிக்கு மனுதாரர் புதிதாக மனு அளிக்கவும், அந்த மனுவின் அடிப்படையில் சம்பந்தப்பட்ட பகுதியை அதிகாரிகள் ஆய்வுசெய்து ஆக்கிரமிப்புகளை அகற்ற உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், நீர்நிலைகளைச் சுற்றியுள்ள பகுதிகளில் ஆக்கிரமிப்புகள் இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.

இதனையடுத்து சென்னையில் மொத்தம் எத்தனை நீர்நிலைகள் உள்ளன என்று மாநகராட்சித் தரப்புக்குத் தலைமை நீதிபதி கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த மாநகராட்சித் தரப்பு வழக்கறிஞர், நீர்நிலைகளை அடையாளம் காணத் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது என்றும், அதன் அடிப்படையில் நீர்நிலைகள் அடையாளம் காணப்பட்டு வருகிறது என்றும் அவர் தெரிவித்தார்.

இதனைத்தொடர்ந்து கேள்வி எழுப்பிய நீதிபதிகள், பக்கிங்காம் கால்வாயை ஏன் சீர்படுத்தவில்லை. அது ஒரு அருமையான, நீர்வழிப் போக்குவரத்துக்கான கால்வாய். இதனை முறையாகச் சீர்படுத்தவில்லை என்றால், வரலாற்றுப் புத்தகத்தில் கால்வாய் பற்றிய பதிவுகள் மட்டும்தான் இருக்கும் என்று அவர்கள் வேதனை தெரிவித்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com