‘என் பெயரை சொல்லி குற்றச்சாட்டு சொல்கிறார்கள்; அதை நிரூபிக்க வேண்டும்’ - முன்னாள் அமைச்சர் மூர்த்தி

கோவில்களுக்கு சொந்தமான இடத்தை பதிவு செய்யவே முடியாது என முன்னாள் அமைச்சர் மூர்த்தி தெரிவித்துள்ளார்.
‘என் பெயரை சொல்லி குற்றச்சாட்டு சொல்கிறார்கள்; அதை நிரூபிக்க வேண்டும்’ - முன்னாள் அமைச்சர் மூர்த்தி
Published on

சென்னை,

பழனி கோவில் நிலம் பத்திரப்பதிவு செய்யப்பட்ட விவகாரத்தில் அமைச்சர் நிர்மல் குமார் தெரிவித்திருந்த கருத்துகளுக்கு முன்னாள் பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி பதிலளித்துள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது;-

“கோவில்களுக்கு சொந்தமான இடத்தை பதிவு செய்யவே முடியாது. எந்தெந்த இடங்களில் பத்திரப்பதிவு அலுவலகங்கள் இருக்கிறதோ, அதற்கு சம்பந்தப்பட்டு வரக்கூடிய கோவில் நிலங்கள், அரசு நிலங்கள், நீர்நிலை, புறம்போக்கு நிலங்கள், வக்புவாரிய சொத்து உள்ளிட்ட எதுவாக இருந்தாலும் அவற்றை பதிவு செய்ய முடியாது என ஏற்கனவே குறித்திருப்பார்கள்.

இன்றைக்கு ஒரு இடத்தை பதிய வேண்டும் என்றால், முதல் நாளே அதற்கான டோக்கன் போட்டிருப்பார்கள். அந்த டோக்கன் போடாமல் பதிய முடியாது. எனவே கோவில் நிலத்தை தெரியாமல் பதிவு செய்துவிட்டார்கள், இது யாருக்கும் தெரியாமல் எதார்த்தமாக நடந்துவிட்டது என்றெல்லாம் சொல்ல முடியாது.

589 பத்திர அலுவலகங்களுக்கும் நான் நேரடியாக ஆள் போட்டதாகவும், அவர்கள் வாங்கக்கூடிய பணத்தில் எனக்கு 20 சதவீதம் பங்கு கொடுத்ததாகவும் அமைச்சர் நிர்மல்குமார் எனது பெயரை குறிப்பிட்டு குற்றச்சாட்டு சொல்கிரார். ஒரு அலுவலகத்திற்காவது நான் நேரடியாக பேசினேனா? என்பதை அவர் நிரூபிக்க வேண்டும். எந்த அலுவலகத்தில் நான் ஆள் போட்டு அவங்கள் பெற்ற பணத்தில் பங்கு வாங்கினேன் என்பதை சொல்ல வேண்டும்.

பொத்தாம் பொதுவாக எதுவும் சொல்லக் கூடாது. யார் எங்கே தவறு செய்தாலும், தவறு செய்தவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதில் எங்களுக்கு எந்த மாற்றுக் கருத்தும் இல்லை.”

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com