

சென்னை,
சட்டப்பேரவையில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பேசத் தொடங்கிய பிறகே வாக்குவாதமும், சலசலப்பும் ஏற்படுவதாக தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
சட்டப்பேரவையில் இன்று பேசிய அவர், “மக்களின் பிரச்சினைகளை விவாதிப்பதற்காகத்தான் சட்டப்பேரவை நடைபெறுகிறது. ஆனால் கடந்த 3, 4 நாட்களாக பேரவையில் தொடர்ந்து வாக்குவாதம் நடைபெற்று வருகிறது. ஒருவர் மீது ஒருவர் குற்றச்சாட்டுகளை முன்வைப்பதால் பேரவை நிகழ்வுகள் நீண்ட நேரம் நடைபெறுகின்றன. இதனால் தமிழக மக்களுக்கு என்ன பயன்?” என்று கேள்வி எழுப்பினார்.
மேலும், “உறுப்பினர்கள் தேர்வுக்கு தயாராவதைப் போல் பேரவையில் பேசுவதற்கு தயாராகி வருகின்றனர். ஆனால் மக்களின் பிரச்சினைகள் குறித்து சுமார் ஒரு மணி நேரம் மட்டுமே பேசப்படுகிறது. மீதமுள்ள நேரம் முழுவதும் வாக்குவாதமாகவே செல்கிறது. அனைவருக்கும் பேரவையில் பேசுவதற்கு உரிய வாய்ப்பு வழங்க வேண்டும்” என்றார்.
தொடர்ந்து பேசிய பிரேமலதா, “அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பேசாத வரை சட்டப்பேரவை அமைதியாக செல்கிறது. அவர் பேசத் தொடங்கியவுடன் பிரச்சினை ஏற்படுகிறது. இது சட்டமன்றம்; சண்டை மன்றம் அல்ல. எனவே அவரை பேச அனுமதிக்கக் கூடாது” என்று தெரிவித்தார்.
மேலும், தற்போதைய அரசுக்கு மக்கள் நலனுக்காக செயல்பட வாய்ப்பு கிடைத்துள்ளதாகவும், மக்களுக்காக தங்களால் முடிந்த பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.