

திருச்செந்தூர்,
திருச்செந்தூர் சுப்பிரமணிய சாமி கோவிலுக்கு தக்கார் இரா.கண்ணன் ஆதித்தன் தனது சொந்த நிதியில் இருந்து ரூ.12 லட்சம் செலவில் 40 அதிநவீன கண்காணிப்பு கேமராக்களை வழங்கி உள்ளார். இவற்றை கோவில் வளாகம், கடற்கரை மற்றும் கோவில் வெளிப்பகுதிகள் என 40 இடங்களில் பொருத்தி உள்ளனர்.
இந்த கண்காணிப்பு கேமராக்களில் பதிவாகும் காட்சிகளை கோவில் இணை ஆணையர் அலுவலகம் எதிரே உள்ள கணினி கட்டுப்பாட்டு அறையில் உள்ள டி.வி.க்களில் மிக துல்லியமாக பார்க்க இயலும். இதன் மூலம் சாமி சிலைகள், நகைகள், உண்டியல்கள் போன்றவற்றையும், கோவில் ஊழியர்கள், பக்தர்களின் செயல்பாடுகளையும் உன்னிப்பாக கவனிக்க முடியும். இதனால் பக்தர்களுக்கு பாதுகாப்பு வழங்குவதுடன், குற்ற செயல்களையும் தடுக்கலாம்.
இந்த கண்காணிப்பு கேமராக்களின் தொடக்க நிகழ்ச்சி நேற்று நடந்தது. கோவில் இணை ஆணையர் பாரதி தலைமை தாங்கினார். ஓய்வு பெற்ற கால்நடைத்துறை உதவி இயக்குனர் டாக்டர் பாலசுப்பிரமணிய ஆதித்தன், கோவில் கணினி கட்டுப்பாட்டு அறையில் இருந்து கண்காணிப்பு கேமராக்களை இயக்கி தொடங்கி வைத்து பார்வையிட்டார்.
அப்போது இந்து முன்னணி மாநில துணை தலைவர் வி.பி.ஜெயக்குமார், குமரேச ஆதித்தன், ஜெயேந்திர ஆதித்தன், சரவணன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.