

திருவள்ளூர்,
திருவள்ளூர் அடுத்த தாவுத்கான் பேட்டை சேர்ந்த பார்வதி (80) என்ற மூதாட்டி தனியாக வசித்து வந்தார். இந்த நிலையில் அதிகாலையில் மதுபோதையில் வாலிபர் ஒருவர் மூதாட்டியின் வீட்டுக்குள் நுழைந்தார்.
வீட்டில் தனியா இருந்த மூதாட்டியிடம் வாலிபர் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டார். இதனால் பதற்றமடைந்த மூதாட்டி சத்தம் போட்ட நிலையில் அந்த வாலிபர் அங்கிருந்து தப்பி ஓட்டம் பிடித்தார்.
மூதாட்டியின் சத்தம் கேட்டு அருகில் வசிக்கும் அவரது உறவினர்கள் மற்றும் அக்கம் பக்கத்தினர் அங்கு திரண்டு வந்தனர். போதை வாலிபர் தப்பி ஓடும் போது அவர் வைத்திருந்த செல்போனை தவற விட்டு சென்று இருந்தார்.
இதற்கிடையே, தவறவிட்ட தனது செல்போனை தேடி மீண்டும் அந்த வாலிபர் அங்கு வந்தார். அப்போது அவரை மூதாட்டியின் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் மடக்கி பிடித்தனர். அவருக்கு தர்ம அடி கொடுத்த பொதுமக்கள், பின்னர் அவரை போலீசில் ஒப்படைத்தனர். அவரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.