திருவண்ணாமலை: 2,668 அடி உயர மலை உச்சியில் காட்சி அளித்த மகாதீபம் இன்றுடன் நிறைவு..!

திருவண்ணாமலையில் 2,668 அடி உயர மலை மீது காட்சி அளித்த மகாதீபம் இன்றுடன் நிறைவு பெறுகிறது.
திருவண்ணாமலை: 2,668 அடி உயர மலை உச்சியில் காட்சி அளித்த மகாதீபம் இன்றுடன் நிறைவு..!
Published on

திருவண்ணாமலை,

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத்திருவிழா கடந்த மாதம் 27-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி தொடர்ந்து 10 நாட்கள் வெகு சிறப்பாக நடைபெற்றது. விழாவின் நிறைவாக கடந்த 6-ந்தேதி கோவில் பின்புறம் உள்ள மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்பட்டது.

இந்த மகா தீபம் மலை உச்சியில் தொடர்ந்து 11 நாட்கள் பக்தர்களுக்கு காட்சி அளிக்கும். அதன்படி, தினமும் மாலை 6 மணிக்கு மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்பட்டு வருகின்றது. மகா தீப காட்சியை பக்தர்கள் பக்தி பரவசத்துடன் தரிசனம் செய்து வருகின்றனர்.

இந்த நிலையில், 2,668 அடி உயர மலை மலை மீது காட்சி தரும் மகாதீபம் இன்றுடன் (வெள்ளிக்கிழமை) நிறைவு பெறுகிறது. அதைத்தொடர்ந்து நாளை (சனிக்கிழமை) காலை மகாதீபம் ஏற்றப்பட்ட தீப கொப்பரை மலை உச்சியில் இருந்து அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு கொண்டு வரப்படுகிறது. பின்னர், தீப கொப்பரைக்கு சிறப்பு பூஜைகள் முடிந்ததும், கோயில் 5ம் பிரகாரத்தில் உள்ள ஆயிரங்கால் மண்டபத்தில் பக்தர்களின் தரிசனத்துக்காக வைக்கப்படுகிறது.

தொடர்ந்து வருகிற 6-ந்தேதி கோவிலில் நடைபெறும் ஆருத்ரா தரிசனத்தின் போது மகா தீப மை (தீப சுடர் பிரசாதம்) சிவகாமசுந்தரி சமேத நடராஜருக்கு அணிவிக்கப்படும். அதன்பிறகு கோவில் நிர்வாகம் சார்பில் பக்தர்களுக்கு தீப 'மை' பிரசாதம் வழங்கப்படும் என்று கோவில் நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com