திருவாரூர்: பொங்கல் விழாவில் ரகளை செய்த போதை ஆசாமி கத்தியால் குத்திக்கொலை

செல்வகுமாரை தாக்கிய கிராம மக்கள், அவரிடம் இருந்த கத்தியைப் பிடுங்கி அவரது கழுத்தில் குத்தியுள்ளனர்.
திருவாரூர்: பொங்கல் விழாவில் ரகளை செய்த போதை ஆசாமி கத்தியால் குத்திக்கொலை
Published on

திருவாரூர்,

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே உள்ள மேலமரவாக்காடு கிராமத்தில் நேற்று காணும் பொங்கலை முன்னிட்டு விளையாட்டுப் போட்டிகள் உற்சாகமாக நடைபெற்றுக் கொண்டிருந்தன. அப்போது அதே கிராமத்தைச் சேர்ந்த செல்வகுமார் என்பவர் தனது நண்பர் சதீஷ் மற்றும் மைத்துனர் சதீஷ்குமார் ஆகியோருடன் மதுபோதையில் அங்கு வந்து போட்டியில் பங்கேற்றவர்களிடம் தகராறு செய்ததாக கூறப்படுகிறது.

இதையடுத்து ஊர்மக்கள் அவர்களை சமாதானப்படுத்தி வெளியேற்ற முயற்சித்தபோது ஆத்திரமடைந்த செல்வகுமார், தனது இடுப்பில் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து அங்கிருந்தவர்களை குத்த முயற்சித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் சிலர் செல்வகுமாரை தடுத்து தாக்கியதோடு, அவரிடம் இருந்த கத்தியைப் பிடுங்கி அவரது கழுத்தில் குத்தியுள்ளனர்.

இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்த செல்வகுமார், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் இந்த மோதலில் காயமடைந்த சதீஷ் மற்றும் சதீஷ்குமார் ஆகியோர் மன்னார்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த மன்னார்குடி போலீசார், அரவிந்த்குமார், அருண்குமார், சிவபிரகாசம் மற்றும் சண்முகவடிவேல் ஆகிய 4 பேரை கைது செய்துள்ளனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com