

சென்னை,
திருவள்ளூர், திருத்தணி, பூந்தமல்லி, மதுரவாயல், ஆவடி, அம்பத்தூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட நாம் தமிழர் கட்சியின் அனைத்து நிலை பொறுப்பாளர்கள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் சென்னையை அடுத்த அம்பத்தூரில் நேற்று முன்தினம் நடந்தது. கூட்டத்துக்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப் பாளர் சீமான் தலைமை தாங்கினார்.
சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர்களுடன் அவர் கட்சியின் வளர்ச்சிப்பணிகள் குறித்து கலந்துரையாடினார். மேலும் புதிய நிர்வாகிகளையும் அவர் நியமனம் செய்தார்.
தனித்து போட்டி
முன்னதாக சீமான் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
விடுதலை போராட்டத்தில் பங்கேற்று நாட்டுக்காக செக்கிழுத்த வ.உ.சி.க்கு அளிக்காத பாரத ரத்னா விருதை, கிரிக்கெட் வீரர் சச்சின் தெண்டுல்கருக்கு அளித்தனர். இதனால் பாரத ரத்னா விருதை நாங்கள் உயரிய விருதாக ஒரு போதும் பார்த்தது இல்லை.
திருவாரூர், திருப்பரங்குன்றம் தொகுதி இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி தனித்து போட்டியிடும்.
எங்கள் தத்துவத்தையும், கொள்கையையும் ஏற்று இணைய வந்தால் யாரையும் ஏற்றுக்கொள்வோம். திராவிட, தேசிய கட்சிகளோடு இணைவது சாத்தியம் இல்லை.
கலக்கம்
சிலை கடத்தல் விவகாரத்தில் பலரை தப்பிக்க வைக்கத்தான் மத்திய புலனாய்வுக்கு தமிழக அரசு வழக்கை மாற்ற முனைந்தது. பொன்.மாணிக்கவேல் விசாரணை பலருக்கு கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. நேர்மையாக இருப்பதாலேயே அவரை மாற்றத்துடிக்கிறார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.