2,000 ஆண்டுகால சண்டை இது; தோற்றுப் போக மாட்டோம் - மு.க.ஸ்டாலின் பேச்சு

பொருநை, கீழடி அருங்காட்சியகங்களை பிரதமர் பார்வையிட வேண்டும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
2,000 ஆண்டுகால சண்டை இது; தோற்றுப் போக மாட்டோம் - மு.க.ஸ்டாலின் பேச்சு
Published on

நெல்லை,

நெல்லையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று பொருநை அருங்காட்சியகத்தை திறந்து வைத்து ஆர்வமுடன் பார்வையிட்டார். அங்கு வைக்கப்பட்டு இருந்த தொல்லியல் பொருட்கள் குறித்து விவரம் கேட்டறிந்தார். அதனை தொடர்ந்து இன்று ரூ. 694 கோடி மதிப்பிலான திட்டப் பனிகளுக்கு அடிக்கல் நாட்டி, முடிக்கப்பட்ட திட்டங்களை தொடங்கி வைத்தார். பின்னர் பல்வேறு நலத்திட்ட உதவிகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

அதன்பின்னர் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-

பொருநை தமிழரின் பெருமை; இந்திய துணைக் கண்டத்தின் வரலாறு. தெற்கில் இருந்துதான் வரலாற்றை எழுத வேண்டும் என்ற நமது கூற்றுக்கு சான்றாக உள்ளது. தமிழர்களின் வரலாற்று தொன்மைகளை நிரூபிக்கும் ஆய்வு நடக்கக் கூடாது என மத்திய அரசு முட்டுக்கட்டை போடுகிறது. ஆய்வு முடிவுகள் வரக்கூடாது என்ற எண்ணம் கொண்டவர்களை நாம் எதிர்த்துப் போராடிக் கொண்டிருக்கிறோம்.

இலக்கியம் மட்டுமே சான்றாகாது என்பதால் அறிவியல் சான்றுடன் நிரூபிக்க விரும்புகிறோம். இல்லாத சரஸ்வதி நதி நாகரீகத்தை தேடி அலைவோருக்கு, கண் முன்னே நாம் வெளியிடும் ஆய்வுகள் தெரியவில்லை. அதற்காக நாம் விட்டுக்கொடுக்க முடியுமா?. 2,000 ஆண்டுகால சண்டை இது; விட்டுக்கொடுக்க மாட்டோம், தோற்றுப் போக மாட்டோம்.

கீழடி, பொருநை அருங்காட்சியங்களை பிரதமர் மோடி, நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் நேரில் வந்து பார்வையிட வேண்டும். அப்படி பார்த்தால் தான் தமிழக நாகரிகத்தின் தொன்மை குறித்து தெரியும். நம்மை விமர்சிப்பவர்கள், எதிர்ப்பவர்கள் கூட, தமிழ் என்றாலே திமுகதான் என்று மனதுக்குள் நினைக்கின்றனர்.

100 நாள் வேலைத் திட்டத்தை மத்திய அரசு முடக்கியது குறித்து போலி விவசாயி எடப்பாடி பழனிசாமி மூச்சுக்கூட விடவில்லை. எடப்பாடி பழனிசாமியின் துரோக லிஸ்டில் இதுவும் ஒன்று. காந்தியின் பெயரை நீக்கியதுடன் 40% நிதியை மாநிலங்கள் எற்க வேண்டும் என நிதிச்சுமையை அதிகரித்துள்ளனர். விபி-ஜி-ராம்ஜி திட்டத்தை மக்கள் சக்தியுடன் மாற்றுவோம்.

நெல்லையின் அடையாளமாக விளங்கும் நெல்லையப்பர் கோவிலை, 700 ஆண்டுகளுக்குப் பிறகு புதுப்பித்து திருப்பணிகள் மேற்கொண்டவர் தலைவர் கலைஞர். அவர் வழியில், இக்கோவிலுக்கு ஏராளமான நலத்திட்டங்களை திராவிட மாடல் அரசு தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக, 1991ஆம் ஆண்டு நடந்த தீ விபத்தில் எரிந்த நெல்லையப்பர் கோவில் தேர் மீண்டும் ஓடும் என நான் அறிவித்தேன். அதன்படி, வரும் ஜனவரியில் நெல்லையப்பர் வெள்ளித்தேர் மீண்டும் ஓடும். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com