

சென்னை,
கூட்டணி உடைவதற்கு திமுகவின் அணுகுமுறைதான் காரணம் என திருமாவளவன் பேசியுள்ளார்.
விசிக தலைவர் திருமாவளவன், திருமண நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பேசியதாவது;
தவெகவை குறைத்து மதிப்பிட்டதுதான் திமுகவின் தோல்விக்கு காரணம். விஜய் ஆர்.எஸ்.எஸ். பெற்றெடுத்த பிள்ளை என பேசினேன். ஆனால் அவர் அதிமுக, பாஜக, பாமகவிடம் ஆதரவு கேட்கவில்லை. நாங்கள் விமர்சித்தோம். ஆனால் விஜய் காங்கிரஸ் மற்றும் திருமாவளவனிடம் ஆதரவு கேட்டார். கவர்னர் ஆட்சி வந்துவிடக்கூடாது என இடதுசாரிகள் தவெகவுக்கு ஆதரவு அளித்ததால் விசிகவும் தவெகவுக்கு ஆதரவு அளித்தது.
விசிக கூடாரம் காலியாகிவிட்டதால் திருமாவளவன் விஜய்யின் பின்னால் சென்றதாக கூறுகிறார்கள். பதவிக்காக கூட்டணி மாறியதாக என் மீது வன்மத்தை கக்குகின்றனர். பதவி ஆசை இருந்திருந்தால் காங்கிரஸ் போனதுமே நானும் சென்றிருப்பேன். நான் எம்.எல்.ஏ.வாக இருந்திருந்தால் அமைச்சராக ஆசைப்பட்டு இருக்கமாட்டேன். என் நம்பகத்தன்மையை உடைக்க சிலர் முயற்சி செய்தனர். 2024ல் திமுக கூட்டணியில் இருந்து விசிக வெளியேற முயற்சித்தார்கள். ஆனால் கூட்டணி உடையாமல் காத்தேன்.
திமுக - காங்கிரஸ் கூட்டணியில் நல்லிணக்கம் இல்லை. மதிமுகவை திமுக சின்னத்தில் நிற்க வைத்தீர்களே.. அவர்களுக்கு வருத்தம் ஏற்பட்டு இருக்காதா? கமலின் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு கூடுதல் தொகுதிகளை ஏன் வழங்கவில்லை.? புதிதாக ஒரு கட்சியை கொண்டுவந்து கூடுதலாக சீட் கொடுத்ததால் பிரச்சினை ஏற்பட்டது. விசிக, காங்கிரஸ், இடதுசாரிகள் கூட்டணியில் இருந்து விலகியதற்கு திமுகவின் அணுகுமுறையே காரணம். கூட்டணி கட்சிகளை திமுக கையாண்ட விதம்தான் தவறு என எந்த நியாயஸ்தர்களும் பேசவில்லை. திமுகதான் எங்களை கைவிட்டுவிட்டது. நாங்கள் கூட்டணியில் இருந்து வெளியேறவில்லை.
மதச்சார்பற்ற என்ற இருந்தால்தான் பாஜக அல்லாத கூட்டணியாக இருக்கும். எனவே கூட்டணியின் பெயரில் மதச்சார்பற்ற எனும் வார்த்தையை சேர்க்க வேண்டும் விஜய்யிடம் கூறினேன்.”
இவ்வாறு அவர் பேசினார்.