

சென்னை,
குஜராத்தில் வரலாறு காணாத வகையில் கனமழை பெய்து வருகிறது. முக்கிய நகரங்கள் வெள்ளத்தில் தத்தளித்து வருகின்றன. இதனால் அங்கு பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. கனமழை காரணமாக இன்று குஜராத் மாநிலம் ஓகாவில் இருந்து தூத்துக்குடிக்கு இயக்கப்பட இருந்த எக்ஸ்பிரஸ் ரெயில் ரத்து செய்யப்பட்டது.
இந்த நிலையில் அதன் இணை ரெயிலான தூத்துக்குடியில் இருந்து ஓகா செல்லும் விவேக் எக்ஸ்பிரஸ் ரெயிலும் ரத்து செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக, தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:-
தூத்துக்குடியில் இருந்து ஓகாவுக்கு ஜூலை 26-ந்தேதி இரவு 11.40 மணிக்கு புறப்பட வேண்டிய விவேக் எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண் 19567) முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது. அதற்கான இணை ரெயில் (19568) ரத்து செய்யப்பட்டுள்ளதால், இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.