தூத்துக்குடி: முதியவர் உள்பட 2 பேர் தூக்குப்போட்டு தற்கொலை

விளாத்திகுளம் அருகே இரு வேறு இடங்களில் குடும்பப் பிரச்சினை மற்றும் மதுப்பழக்கம் காரணமாக 2 பேர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டனர்.
தூத்துக்குடி: முதியவர் உள்பட 2 பேர் தூக்குப்போட்டு தற்கொலை
Published on

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகேயுள்ள க.குமராபுரம் கிராமத்தைச் சேர்ந்த திருமால்ரெட்டியார் மகன் வையணன் (வயது 90). இவர் கடந்த சில நாட்களாக குடும்ப பிரச்சினை காரணமாக மிகுந்த மன உளைச்சலில் இருந்ததாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில் மனவேதனையில் இருந்த வையணன் நேற்று முன்தினம் தனது வீட்டில் உள்ள மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

விளாத்திகுளம் அருகேயுள்ள கமலாபுரம் கிராமத்தைச் சேர்ந்த இளையராஜா மகன் முருகேசன்(36). கட்டிடத் தொழிலாளியான இவருக்கு தீவிர குடிப்பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் இவரது வீட்டில் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. மதுப்பழக்கத்தால் விரக்தியடைந்த முருகேசன், அவ்வப்போது தற்கொலை செய்துகொள்ளப் போவதாகக் குடும்பத்தினரை மிரட்டி வந்துள்ளார்.

இந்த நிலையில் வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் தனது வேட்டியால் மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். விளாத்திகுளம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் நடந்த இந்த தற்கொலை சம்பவங்கள் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com