தூத்துக்குடி: கொலை வழக்கில் 2 பேருக்கு ஆயுள் தண்டனை

தூத்துக்குடி மாவட்டத்தில் இந்த ஆண்டு இதுவரை மொத்தம் 22 கொலை வழக்குகளில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனை வழங்கி தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
கடந்த 2019-ம் ஆண்டு தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அய்யனார்ஊத்து பகுதியைச் சேர்ந்த பரமசிவம் மகன் அண்ணாமலை (வயது 43) என்பவரை அதே பகுதியைச் சேர்ந்த அவரது உறவினர்களான அண்ணாமலை என்பவரது மகன் உடையார்(76), ராமச்சந்திரன் மகன் கோதண்டராமர்(40) ஆகியோர் சேர்ந்து முன்விரோதம் காரணமாக அய்யனார்ஊத்து பகுதியில் வைத்து அரிவாளால் தாக்கி கொலை செய்தனர். இந்த வழக்கில் கயத்தாறு காவல் நிலைய போலீசார் உடையார் மற்றும் கோதண்டராமர் ஆகிய குற்றவாளிகளை கைது செய்தனர்.
இந்த வழக்கின் விசாரணை தூத்துக்குடி மாவட்ட முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி தாண்டவம் இன்று உடையார், கோதண்டராமர் ஆகிய 2 பேருக்கும் தலா ஆயுள்தண்டனை மற்றும் தலா ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பு வழங்கினார்.
இந்த வழக்கை சிறப்பாக புலனாய்வு செய்த அப்போதைய கயத்தாறு போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆவுடையப்பன் மற்றும் குற்றவாளிக்கு தண்டனை பெற்றுத் தர நீதிமன்றத்தில் திறம்பட வாதிட்ட அரசு தரப்பு வழக்கறிஞர் ஆனந்த் கேப்ரியல்ராஜ், விசாரணைக்கு உதவியாக இருந்த தலைமை காவலர் ரெங்கலட்சுமி ஆகியோரை மாவட்ட எஸ்.பி. ஆல்பர்ட் ஜான் பாராட்டினார்.
தூத்துக்குடி மாவட்டத்தில் இந்த ஆண்டு இதுவரை மொத்தம் 22 கொலை வழக்குகளில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனை வழங்கி தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.






