தூத்துக்குடி: மாமனாரை வெட்டிக்கொன்ற டிரைவர் உள்பட 6 பேர் கைது

தூத்துக்குடியைச் சேர்ந்த ஒரு பெண்ணுக்கும், மதுரையைச் சேர்ந்த ஒரு ஆட்டோ டிரைவருக்கும் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது.
கொலையுண்ட முனியசாமி.
Published on

தூத்துக்குடி,

தூத்துக்குடி அருகே மாமனாரை வெட்டிக் கொன்ற ஆட்டோ டிரைவர் உள்பட 6 பேர் கைது செய்யப்பட்டனர்.

குடும்பத் தகராறு

தூத்துக்குடி அருகே உள்ள முத்தையாபுரம் வேலாயுதநகர் 2-வது தெருவைச் சேர்ந்தவர் முனியசாமி (வயது 45). இவரது மகள் வைஷ்ணவிக்கும், மதுரை அவனியாபுரத்தை சேர்ந்த ஆட்டோ டிரைவரான முருகன்(27) என்பவருக்கும் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. கணவன்-மனைவி இடையே அடிக்கடி குடும்பத் தகராறு ஏற்பட்டு வந்தது. கடந்த 1 மாதத்திற்கு முன் முனியசாமி தனது மகளை பார்க்க மதுரைக்கு சென்றார். அப்போது, முருகன் தனது மாமனாரான முனியசாமியை தாக்கியதாக கூறப்படுகிறது.

மாமனார் வெட்டிக்கொலை

அதைத் தொடர்ந்து முனியசாமி தனது மகள் வைஷ்ணவியை தூத்துக்குடிக்கு அழைத்து வந்து விட்டார். இந்த சம்பவங்களை தொடர்ந்து முருகன் மதுரையில் இருந்து தனது நண்பர்கள் 5 பேருடன் முனியசாமியின் வீட்டிற்கு வந்தார். அங்கு தனது மனைவியை குடும்பம் நடத்த மதுரைக்கு அனுப்புமாறு மாமனாரிடம் கூறினார். ஆனால் முனியசாமி மறுக்கவே ஆத்திரம் அடைந்த முருகன் தனது நண்பர்களுடன் சேர்ந்து அரிவாளால் அவரை வெட்டிக்கொலை செய்ததாக கூறப்படுகிறது.

6 பேர் கைது

இந்த கொலை குறித்து முத்தையாபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய 6 பேரையும் தேடி வந்தனர். போலீசாரின் தீவிர தேடுதல் வேட்டையில் முருகன், அவரது நண்பர்களான சாயல்குடியை சேர்ந்த திருமுருகன்(23), மதுரை நல்லமன்னன்(24), அரவிந்த்(25), தீனதயாளன்(22), பெருமாள்(26) ஆகிய 6 பேரையும் அதிரடியாக கைது செய்தனர். மேலும் அவர்களிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com