

தூத்துக்குடி,
தூத்துக்குடி மாவட்டம், ஏரல் பகுதியில் சாலையில் சென்று கொண்டிருந்தபோது பைக்கிலிருந்து வழுக்கி விழுந்து, கார் கம்பெனி சூப்பர்வைசர் உயிரிழந்தார்.
தூத்துக்குடி மாவட்டம், ஏரல் அருகே உள்ள சிவகளையை சேர்ந்த ராமசாமி மகன் சொரிமுத்து (வயது 30), தூத்துக்குடியில் உள்ள தனியார் பேட்டரி கார் கம்பெனியில் சூப்பர்வைசராக வேலை பார்த்து வந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் திருச்செந்தூருக்கு பைக்கில் சென்றுவிட்டு ஊருக்கு திரும்பி கொண்டிருந்தார்.
குரும்பூர் அடுத்த சேதுக்குவாய்த்தான் புதுநகர் பகுதியில் வளைவில் திரும்பும்போது குடிநீர் குழாய் உடைந்து தண்ணீர் சென்ற பகுதியில் எதிர்பாராதவிதமாக பைக் வழுக்கி கீழே விழுந்தார். இதில் தலையில் படுகாயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே பலியானார். இதுகுறித்த தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த குரும்பூர் போலீசார் அவரது உடலை மீட்டு பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.