தூத்துக்குடி: கோவில் வளாகத்தில் சுற்றித் திரியும் நாய்கள்- மாநகராட்சி நடவடிக்கை எடுக்க கோரிக்கை

தூத்துக்குடியில் கோவில் வளாகத்தில் அதிகப்படியாக சுற்றித் திரியும் தெரு நாய்களால் பக்தர்களுக்கும், குழந்தைகளுக்கும் இடையூறாக உள்ளது.
இந்து முன்னணி தூத்துக்குடி மாநகர் மாவட்ட தலைவர் இசக்கிமுத்து குமார் மாநகராட்சி கமிஷனருக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது:
தூத்துக்குடி மாநகராட்சி 39வது வார்டு பகுதியில் பிரசித்தி பெற்ற வைகுண்டபதி பெருமாள் கோவில் மற்றும் பாகம்பிரியாள் உடனுறை சங்கர ராமேஸ்வரர் திருக்கோவில் உள்ளது.
தற்போது புரட்டாசி மாதம் பெருமாள் கோவிலுக்கு வாராந்திர சனிக்கிழமைகளில் அதிக அளவு பக்தர்கள் தரிசனத்திற்காக வருகை தருகின்றனர் அதேபோல் தசரா உற்சவ நவராத்திரி திருவிழா நடைபெற்று வருவதால் சிவன் கோவிலுக்கும் அதிகளவு பக்தர்கள் தினசரி வருகை தருகின்றனர். இந்தக் கோவில்களின் வளாகத்தில் அதிகப்படியாக தெரு நாய்கள் சுற்றித் திரிகின்றன. இதனால் பக்தர்களுக்கும், குழந்தைகளுக்கும் இடையூறாக உள்ளது.
குறிப்பாக கடந்த வாரம் சனிக்கிழமை பெருமாள் கோவிலுக்கு வந்த குழந்தையை தெரு நாய் கடிக்க முயன்றது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. நாய் கடியால் ரேபிஸ் நோய் பரவும் அபாய சூழ்நிலை உள்ளது. எனவே பக்தர்களுக்கு இடையூறாக கோவில் வளாகங்களில் சுற்றித் திரியும் தெருநாய்களை மாநகராட்சி நிர்வாகம் உடனடியாக பிடித்து அப்புறப்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுக்கிறேன்.
இவ்வாறு அந்த மனுவில் அவர் தெரிவித்துள்ளார்.






