தூத்துக்குடி: ஓடை பாலத்தில் தவறி விழுந்த டிரைவர் உயிரிழப்பு

நாலாட்டின்புதூரில் உள்ள ஓடைப்பாலத்தில் நெல்லையைச் சேர்ந்த டிரைவர் ஒருவர் பேருந்துக்காக காத்திருந்தபோது, திடீரென பாலத்திலிருந்து 10 அடி ஆழமுள்ள பள்ளத்தில் தவறி விழுந்தார்.
தூத்துக்குடி: ஓடை பாலத்தில் தவறி விழுந்த டிரைவர் உயிரிழப்பு
Published on

நெல்லை மாவட்டம், செட்டிகுளம் சீவலப்பேரி ரோடு பகுதியை சேர்ந்த குருசாமி மகன் ரமேஷ்பாபு (வயது 45), டிரைவராக வேலை பார்த்து வந்தார். இவரது மனைவி கல்பனா(39). இவர்களுக்கு குருபரதன்(15) என்ற மகன் உள்ளார். ரமேஷ்பாபு கடந்த 21ம் தேதி வேலை நிமித்தமாக கோவில்பட்டிக்கு சென்றுள்ளார். பின்னர் நாலாட்டின்புதூர் அருகே உள்ள தனியார் டைல்ஸ் கம்பெனி அருகில் நெல்லை-மதுரை தேசிய நெடுஞ்சாலையில் நெல்லை செல்வதற்கு பேருந்துக்காக அப்பகுதியில் உள்ள ஓடைப்பாலத்தில் அமர்ந்திருந்தார்.

அப்போது எதிர்பாராத விதமாக திடீரென அந்த பாலத்தில் இருந்து தவறி பின்னால் உள்ள பள்ளத்தில் விழுந்துள்ளார். சுமார் 10 அடி ஆழமுள்ள பள்ளத்தில் விழுந்ததால் தலையில் படுகாயம் அடைந்த நிலையில் மயங்கி கிடந்துள்ளார். இதுகுறித்து அப்பகுதி மக்கள் கொடுத்த தகவலின் பேரில் நாலாட்டின்புதூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் காளிமுத்து மற்றும் போலீசார் அப்பகுதிக்கு சென்று, படுகாயங்களுடன் கிடந்த அவரை மீட்டு 108 ஆம்புலன்சில் ஏற்றி கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

அங்கு அவருக்கு முதலுதவி அளிக்கப்பட்டு பின்னர் மேல் சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் நேற்று முன்தினம் காலையில் அவர் உயிரிழந்தார். இதுகுறித்து நாலாட்டின்புதூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

X

Daily Thanthi
www.dailythanthi.com