தூத்துக்குடி: ரெயிலில் இருந்து தவறி விழுந்த முதியவர் சாவு

செய்துங்கநல்லூர் பகுதியைச் சேர்ந்த முதியவர் ஒருவர் திருச்செந்தூரில் இருந்து ஊருக்கு செல்வதற்காக நெல்லை பயணிகள் ரெயிலில் ஏறி சென்றார்.
தூத்துக்குடி மாவட்டம், செய்துங்கநல்லூர் அருகே உள்ள விட்டிலாபுரம் பகுதியை சேர்ந்தவர் வண்டிமலையான் (வயது 60). இவர் நேற்று மாலையில் திருச்செந்தூரில் இருந்து ஊருக்கு செல்வதற்காக நெல்லை பயணிகள் ரெயிலில் ஏறி சென்றார். அந்த ரெயில் செய்துங்கநல்லூர் ரெயில் நிலையம் அருகில் நிற்பதற்காக மெதுவாக சென்று கொண்டிருந்தது.
அப்போது ஓடிக்கொண்டிருந்த அந்த ரெயிலில் இருந்து அவர் இறங்க முயற்சித்துள்ளார். அப்போது அவர் நிலைதடுமாறி ரயிலில் இருந்து தவறி தண்டவாளத்தில் விழுந்தார். இதில் அவரது தலையில் பலத்த காயமடைந்து மயங்கிய நிலையில் கிடந்தார். சிறிது நேரத்தில் ரெயில் நின்றவுடன் அக்கம் பக்கத்தினர் ஓடிச்சென்று ரெயிலுக்கு அடியில் தண்டவாளத்தில் கிடந்த அவரை மீட்டு பிளாட்பாரத்திற்கு கொண்டு சென்றனர். ஆனால் அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்த ரெயில்வே போலீசார் அங்கு சென்று, அவரது உடலை கைப்பற்றி நெல்லை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து அந்த போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.






