தூத்துக்குடி: குடும்பத் தகராறில் மாமனாருக்கு அரிவாள் வெட்டு- மருமகனுக்கு போலீஸ் வலைவீச்சு

சாத்தான்குளம் பகுதியில் மருமகன் வீட்டில் ஏற்பட்ட தகராறில் ஆத்திரமடைந்த மருமகன் திடீரென அரிவாளை எடுத்து மாமனாரை சரமாரி வெட்டினார்.
தூத்துக்குடி: குடும்பத் தகராறில் மாமனாருக்கு அரிவாள் வெட்டு- மருமகனுக்கு போலீஸ் வலைவீச்சு
Published on

தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் ஆர்.சி. வடக்கு தெருவை சேர்ந்தவர் அந்தோணி முத்து (வயது 53). இவரது மகள் அருணா முத்து. இந்த பெண்ணும், அதே தெருவைச் சேர்ந்த அந்தோணிராஜ் மகன் அன்னராஜ் என்பவரும் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு காதல் திருமணம் செய்துள்ளனர். அவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் கணவன் மனைவிக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அருணா முத்து தனது பிள்ளைகளுடன் கணவனை விட்டு பிரிந்து கடந்த 3 மாதங்களாக தந்தை வீட்டில் தங்கியுள்ளார்.

இந்த நிலையில் கடந்த 2-ந் தேதி இரவு அன்னராஜ், மாமனார் அந்தோணிமுத்து வீட்டிற்கு சென்று மனைவியையும், பிள்ளைகளையும் தன்னுடன் வருமாறு அழைத்துள்ளார். ஆனால் அருணா முத்து வர மறுத்துவிட்டதால், அன்னராஜ் அங்கிருந்த தனது 2 பிள்ளைகளை மட்டும் தன்னுடன் அழைத்துக்கொண்டு சென்றுவிட்டார்.

இதனை அறிந்த மாமனார் அந்தோணி முத்து, உடனே அன்னராஜ் வீட்டிற்கு சென்று தனது பேரக்குழந்தைகளை தன்னுடன் அனுப்பி வைக்குமாறு கேட்டுள்ளார். இதில் ஏற்பட்ட தகராறில் ஆத்திரமடைந்த அன்னராஜ் திடீரென அரிவாளை எடுத்து மாமனார் அந்தோணி முத்தை சரமாரி வெட்டினார். அதில் அந்தோணி முத்துவிற்கு வலது கை மணிக்கட்டு மற்றும் தோள்பட்டையில் காயம் ஏற்பட்டது.

உடனே அவர் மீட்கப்பட்டு சாத்தான்குளம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்து அந்தோணி முத்து, சாத்தான்குளம் போலீசில் கொடுத்த புகாரின் பேரில், சாத்தான்குளம் இன்ஸ்பெக்டர் ஸ்டீபன் வழக்குப்பதிவு செய்து அன்னராஜை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். 

X

Daily Thanthi
www.dailythanthi.com