

சென்னை,
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிர்ப்பு தெரிவித்து 100வது நாள் நடந்த ஆட்சியர் அலுவலகம் நோக்கிய பொதுமக்களின் பேரணியில் வன்முறை வெடித்தது. தொடர்ந்து கலகக்காரர்களை கட்டுப்படுத்த போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் 13 பேர் பலியாகினர். பலர் பலத்த காயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் தொடர்பாக பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடைபெற்றது.
இந்நிலையில், தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் உயிரிழந்தோர்க்கான நிவாரணைத்தொகையை அதிகரித்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உத்தரவிட்டுள்ளார். இதன்மூலம் துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தோர் குடும்பத்திற்கான நிவாரணைத்தொகை ரூ.10லட்சத்திலிருந்து ரூ.20 லட்சமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
மேலும் பலத்த காயமடைந்தோருக்கு ரூ.3 லட்சத்திலிருந்து, ரூ.5 லட்சமாக நிவாரணைத்தொகை அதிகரிக்கபடும் என்றும் லேசான காயம் அடைந்தவர்களுக்கான நிவாரணைத்தொகை ரூ. 1.5 லட்சமாக உயர்த்தப்படுவதாகவும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். மேலும் தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் 13பேர் உயிரிழந்தது சம்பவம் மிகுந்த துயரமும், மனவேதனையும் அளிப்பதாக முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.