

தூத்துக்குடி,
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே நாலாட்டின்புதூரில் பெயிண்ட் வாளிகளை ஏற்றிச் சென்ற மினி லாரி, திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர தடுப்புக் கம்பியில் மோதி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. மதுரையில் இருந்து நாகர்கோவில் நோக்கி சென்ற அந்த மினி லாரியை மதுரை நரிமேடு பகுதியைச் சேர்ந்த சக்திவேல் என்பவர் ஓட்டிச் சென்றார்.
இந்த விபத்தில் லாரியில் ஏராளமான பிளாஸ்டிக் வாளிகளில் வைக்கப்பட்டிருந்த பெயிண்ட் சாலையில் கொட்டி ஆறாக பெருக்கெடுத்து ஓடியது. விபத்தில் ஓட்டுநர் சக்திவேல் படுகாயமடைந்தார். இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், காயமடைந்த சக்திவேலை மீட்டு கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
சாலையில் சிதறிக் கிடந்த பெயிண்ட் வாளிகளை நெடுஞ்சாலைத்துறை ஊழியர்கள் அகற்றிய நிலையில், அந்த பகுதியில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.