தூத்துக்குடி: தவறவிட்ட நகைப்பையை உரியவரிடம் ஒப்படைத்த காவலருக்கு பாராட்டு

பேய்குளம் பகுதியில் இரவு ரோந்து பணியில் இருந்த காவலர் மாணிக்கராஜ் வியாபாரி தவறவிட்ட நகைப்பையை கண்டெடுத்து சாத்தான்குளம் டி.எஸ்.பி. ஆவுடையப்பனிடம் ஒப்படைத்தாா்.
தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகே தட்டார்மடம் அன்னாள்நகரை சேர்ந்த இருதயம் மகன் சகாய ஜெபஸ்டின் (வயது 33), வியாபாரி ஆவார். இவர் சென்னை முகப்பேரு பகுதியில் மளிகை கடை நடத்தி வருகிறார். இந்த நிலையில் தூத்துக்குடி, தட்டார்மடத்திற்கு திருவிழாவுக்காக இவா், மனைவியுடன் காரில் சென்றுள்ளாா். அப்போது பேய்க்குளம் அருகே உள்ள உறவினா் வீட்டுக்குச் சென்றுவிட்டு சென்னைக்கு சென்றுள்ளாா்.
சகாய ஜெபஸ்டின் காரில் இருந்த கைப்பையை தவற விட்டிருந்தாா். பேய்குளம் பகுதியில் இரவு ரோந்து பணியில் இருந்த காவலர் மாணிக்கராஜ் அந்தப் பையை கண்டெடுத்து சாத்தான்குளம் டி.எஸ்.பி. ஆவுடையப்பனிடம் ஒப்படைத்தாா். அந்த பையில் 2.75 சவரன் நகையும், 110 கிராம் வெள்ளியும், 400 ரூபாயும் இருந்தது.
தவறவிட்ட பையில் இருந்த முகவரியை வைத்து போலீசார் விசாரணை நடத்தியதில், அது சகாய ஜெபஸ்டினுடையது என தெரியவந்தது. இதனையடுத்து அவருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் காவல் நிலையம் வந்த அவரிடம் நகைப்பையை டி.எஸ்.பி. ஏற்பாட்டில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஸ்டீபன் ஒப்படைத்தார். நகைப்பையை கண்டெடுத்து ஒப்படைத்த போலீஸ்காரரை டி.எஸ்.பி. மற்றும் போலீசார் பாராட்டினர்.






