தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் - விசாரணை நிறைவு

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பான அருணா ஜெகதீசன் ஆணைய விசாரணை இன்று நிறைவு பெற்றுள்ளது.
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் - விசாரணை நிறைவு
Published on

தூத்துக்குடி,

தூத்துக்குடியில் கடந்த 2018-ம் ஆண்டு மே மாதம் 22-ந் தேதி நடந்த துப்பாக்கி சூடு மற்றும் தடியடியில் 13 பேர் பலியானார்கள். இதுதொடர்பாக ஓய்வு பெற்ற ஐகோர்ட்டு நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான ஒருநபர் விசாரணை ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது.

துப்பாக்கி சூட்டில் காயம் அடைந்தவர்கள், டாக்டர்கள், போலீசார் உள்பட பல்வேறு தரப்பினரிடம் விசாரணை நடத்தப்பட்டு உள்ளது. மொத்தம் 1,421 பேருக்கு சம்மன் அனுப்பப்பட்டது. இதில் 1,042 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டு வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டு உள்ளது. இதுவரை 35 கட்ட விசாரணை நடைபெற்றுள்ளது.

இதைத்தொடர்ந்து 36-வது கட்ட விசாரணை தூத்துக்குடி பீச் ரோடு விருந்தினர் மாளிகையில் உள்ள முகாம் அலுவலகத்தில் நேற்று அதிகாரி அருணா ஜெகதீசன் தலைமையில் நடந்தது. இதில் தமிழக அரசின் முன்னாள் தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், கூடுதல் போலீஸ் டி.ஜி.பி. விஜயகுமார், முன்னாள் டி.ஜி.பி. ராஜேந்திரன், முன்னாள் உள்துறை செயலாளர் நிரஞ்சன் மார்டி ஆகியோர் நேரில் ஆஜரானார்கள். அவர்களிடம் ஒருநபர் ஆணைய அதிகாரி விசாரணை நடத்தி வாக்குமூலம் பதிவு செய்தார். இதனால் ஒருநபர் ஆணையம் விசாரணை இறுதி கட்டத்தை எட்டியது.

இந்நிலையில், தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான ஆணையம் இன்றுடன் சாட்சிகள் விசாரணையை நிறைவு செய்துள்ளது. 36 கட்ட விசாரணையில் மொத்தம் 1426 பேருக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது, 1,048 சாட்சிகளிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. விசாரணை மேற்கொள்ளப்படு தயாரிக்கப்பட்ட அறிக்கையை ஒருநபர் ஆணையம் விரைவில் அரசிடம் சமர்பிக்கப்பட உள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com