

தூத்துக்குடி,
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி வ.உ.சி.நகரைச் சேர்ந்த கணேசன் மகன் பாலாஜி (வயது 32). இவர் தனக்கு சொந்தமான காரில் தனது நண்பர்கள் 3 பேருடன் மதுரை பாண்டி கோயிலுக்கு சென்றுவிட்டு, பின்பு மதுரையிலிருந்து கோவில்பட்டி நோக்கி சென்று கொண்டிருந்தார்.
அவர்கள் வந்த கார் மதுரை- தூத்துக்குடி நெடுஞ்சாலையில் எட்டையபுரம் அருகே, குமாரகிரி கிராமம் அடுத்துள்ள ஒரு பள்ளியை தாண்டியவுடன் கார் என்ஜினில் இருந்து புகை வந்துள்ளது. உடனடியாக காரை நிறுத்தி பார்த்தபோது கார் மள, மளவென தீப்பிடித்து எரிந்தது. இதனையடுத்து உடனடியாக காரை விட்டு அனைவரும் இறங்கியதால் எந்த பாதிப்பும் இல்லாமல் உயிர் தப்பினர்.
பின்னர் எட்டையபுரம் தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று எரிந்து கொண்டிருந்த காரில் தீயை போராடி அணைத்தனர். இருந்தாலும் கார் முழுமையாக எரிந்து சேதம் அடைந்தது. வாகனத்தில் இருந்த நபர்கள் யாருக்கும் காயம் இல்லாமல் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். இந்த சம்பவம் குறித்து எட்டையபுரம் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.