தூத்துக்குடி: ஒட்டு மொத்த துப்பாக்கி சுடும் போட்டியில் திருநெல்வேலி சரக டி.ஐ.ஜி. முதலிடம்

தூத்துக்குடி மாவட்டம், வல்லநாடு துப்பாக்கி சுடுதளத்தில் காவல்துறை உயர் அதிகாரிகளுக்கான துப்பாக்கி சுடும் போட்டி நடைபெற்றது.
தூத்துக்குடி மாவட்டம், வல்லநாடு துப்பாக்கி சுடுதளத்தில் 15, 16ம் தேதிகளில் இரண்டு நாட்கள் காவல்துறை உயர் அதிகாரிகளுக்கான துப்பாக்கி சுடும் போட்டி தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி. ஆல்பர்ட் ஜான் முன்னிலையில், திருநெல்வேலி சரக டி.ஐ.ஜி (பொறுப்பு) சந்தோஷ் ஹாதிமணி தலைமையில் நடைபெற்றது.
இந்த போட்டியில் தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டம் மற்றும் திருநெல்வேலி நகரம், தமிழ்நாடு சிறப்பு காவல் படை 9, 11 மற்றும் 12வது பட்டாலியனைச் சேர்ந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள், காவல் ஆணையர் உள்பட காவல் உதவி ஆணையர், துணை ஆணையர், காவல் உதவி கண்காணிப்பாளர், காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர்கள், காவல் துணை கண்காணிப்பாளர்கள் என மொத்தம் 26 காவல்துறை உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
இதில் பிஸ்டல்(Pistol) அல்லது ரிவால்வர் (Revolver) ரக துப்பாக்கி மற்றும் இன்சாஸ்(Insas) ரக துப்பாக்கி சுடும் போட்டி நடைபெற்றது. இந்த போட்டிகளில் பிஸ்டல்(Pistol) அல்லது ரிவால்வர் (Revolver) ரக துப்பாக்கி சுடும் பிரிவில் திருநெல்வேலி மாவட்ட சைபர் குற்றப்பிரிவு ஏ.டி.எஸ்.பி. முருகன் முதலிடத்தையும், திருநெல்வேலி சரக டி.ஐ.ஜி (பொறுப்பு) சந்தோஷ் ஹாதிமணி 2வது இடத்தையும், தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி. ஆல்பர்ட் ஜான் 3வது இடத்தையும் பிடித்து வெற்றி பெற்றனர்.
அதே போன்று இன்சாஸ் (Insas) ரக துப்பாக்கி சுடும் பிரிவில் திருநெல்வேலி சரக டி.ஐ.ஜி (பொறுப்பு) சந்தோஷ் ஹாதிமணி மற்றும் கன்னியாகுமரி மாவட்டம், குளச்சல் உட்கோட்ட ஏ.எஸ்.பி. ரேகா நங்லாட் ஆகிய இருவரும் முதலிடத்தையும், திருநெல்வேலி மாநகர பாளையங்கோட்டை போலீஸ் உதவி கமிஷனர் சுரேஷ் மற்றும் கன்னியாகுமரி பயிற்சி டி.எஸ்.பி. இளஞ்செழியன் ஆகிய இருவரும் 2வது இடத்தையும், தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி. ஆல்பர்ட் ஜான் 3வது இடத்தையும் பிடித்து வெற்றி பெற்றனர்.
ஒட்டுமொத்த துப்பாக்கி சுடும் போட்டியில் திருநெல்வேலி சரக டி.ஐ.ஜி. (பொறுப்பு) சந்தோஷ் ஹாதிமணி முதலிடத்தையும், திருநெல்வேலி மாவட்ட சைபர் குற்றப்பிரிவு ஏ.டி.எஸ்.பி. முருகன் 2வது இடத்தையும், தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி. ஆல்பர்ட் ஜான் 3வது இடத்தையும் பிடித்து வெற்றி பெற்றுள்ளனர். வெற்றி பெற்றவர்களுக்கு திருநெல்வேலி சரக டி.ஐ.ஜி (பொறுப்பு) சந்தோஷ் ஹாதிமணி பரிசு வழங்கி பாராட்டினார்.
இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி. மேற்பார்வையில், ஆயுதப்படை போலீஸ் இன்ஸ்பெக்டர் சுனைமுருகன் உள்ளிட்ட காவல்துறையினர் செய்திருந்தனர். இந்த நிகழ்ச்சியின்போது கமாண்டோ படை பிரிவின் ஏ.டி.எஸ்.பி. ஸ்டீபன் ஆகியோர் உடனிருந்தனர்.






