கட்டுமான பொருட்களை கையாள்வதில் தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகம் 212 சதவீதம் வளர்ச்சி


கட்டுமான பொருட்களை கையாள்வதில் தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகம் 212 சதவீதம் வளர்ச்சி
x

2025-26-ம் நிதியாண்டில் ஆகஸ்ட் மாதம் வரை தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகம் 5 லட்சத்து 48 ஆயிரத்து 994 டன் கட்டுமானப் பொருட்களைக் கையாண்டுள்ளது.

தூத்துக்குடி

தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுக ஆணையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் "இந்தியாவின் மொத்த சரக்குகள் கையாளும் முன்னணி துறைமுகங்களில் ஒன்றான வ.உ.சிதம்பரனார் துறைமுகம் கட்டுமானப் பொருட்களைக் கையாள்வதில் குறிப்பிடத்தக்க வளர்ச்சி கண்டுள்ளது. 2025-26-ம் நிதியாண்டில் ஆகஸ்ட் மாதம் வரை துறைமுகம் 5 லட்சத்து 48 ஆயிரத்து 994 டன் கட்டுமானப் பொருட்களைக் கையாண்டுள்ளது.

இது கடந்த நிதியாண்டான 2024-25 நிதியாண்டின் ஆகஸ்ட் மாதம் வரைக் கையாண்ட 1 லட்சத்து 75 ஆயிரத்து 468 டன்களை விட 212.87 சதவீதம் அதிகமாகும். கடந்த சில ஆண்டுகளில், துறைமுகம் கட்டுமானப் பொருட்களைக் கையாளும் திறனை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கட்டுமானப் பொருட்கள் கையாள்வதில் 2023-24-ம் ஆண்டில் 9 லட்சத்து 39 ஆயிரத்து 113 டன்னிலிருந்து, 2024-25-ம் ஆண்டில் 11 லட்சத்து 1 ஆயிரத்து 41 டன்னாக அதிகரித்துள்ளது. இது சரக்கு கையாள்வதில் நிலையான வளர்ச்சியை எடுத்துக்காட்டுகிறது.

துறைமுகம் கையாளும் கட்டுமானப் பொருட்களில், பெரிய கற்கள் (stone rough), நொறுக்கிய கல்துண்டுகள் (stone aggregate) மற்றும் தரைத்தளம் அமைக்க பயன்படும் கான்கிரீட் கற்கள் (paver blocks) ஆகியவை அடங்கும். இவை கட்டுமானப் பொருட்களின் முக்கிய கூறுகளாகும். இந்த பொருட்கள் வ.உ.சி. துறைமுகத்தைச் சுற்றியுள்ள பகுதியிலிருந்து எடுக்கப்பட்டு, மாலத்தீவுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இது நமது கடல்சார் அண்டை நாட்டின் உள்கட்டமைப்பு வளர்ச்சிக்கு முக்கிய பங்காற்றுகிறது.

இந்த வளர்ச்சி பிரதமர் நரேந்திர மோடி 'அண்டை நாடுகளுக்கு முன்னுரிமை' ('Neighbourhood First') கொள்கையின் கீழ், இந்தியாவின் அண்டை நாடுகளுடன் பொருளாதார மற்றும் கட்டுமான ஒத்துழைப்பை ஊக்குவிப்பதற்கு மூலாதாரமாக திகழ்கிறது" என கூறப்பட்டுள்ளது.

இந்த சாதனையைப் பற்றி, துறைமுகத்தின் தலைவரான சுசாந்த குமார் புரோஹித், கூறுகையில், "கட்டுமானப் பொருட்கள் கையாள்வதில் ஏற்பட்ட இந்த முக்கியமான வளர்ச்சி, சரக்கு பரிவர்த்தனையின் நம்பகமான வாயிலாக வ.உ.சி. துறைமுகம் வளர்ந்து வருவதின் முக்கியத்துவத்தை வெளிப்படுத்துகிறது. தொடர்ச்சியான உள்கட்டமைப்பு மேம்பாடுகள் மூலம் இந்த துறைமுகம் உள்நாட்டு மற்றும் பன்னாட்டு வர்த்தகத்தினை மேம்படுத்தும்” என்று கூறினார்.

1 More update

Next Story