

சென்னை,
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவனை கண்டித்து பாஜக மகளிரணி சார்பில் சிதம்பரத்தில் போராட்டம் நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் இந்த போராட்டத்திற்கு போலீசார் தடை விதித்தனர். ஆனால் தடையை மீறி போராட்டத்தில் பங்கேற்பதற்காக காரில் புறப்பட்டு சென்ற நடிகை குஷ்புவை காவல்துறையினர் இன்று காலை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட குஷ்பு உள்ளிட்டோர் கேளம்ப்பாகத்தில் உள்ள விடுதியில் தங்க வைக்கப்பட்டனர்.
இந்நிலையில் மதுரை விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசிய பாஜக மாநில தலைவர் எல்.முருகன், பெண்களை கொச்சைப்படுத்தும் வகையில் பேசுபவர்களை பாதுகாக்கும் நடவடிக்கை திமுக மேற்கொண்டு வருவதாக தெரிவித்தார்.
மேலும் பெண்களை கொச்சைப்படுத்தும் விதத்தில் பேசியவர்களை எதிர்க்கும் அறவழியிலான போராட்டத்திற்கு தமிழக அரசு தடை விதித்திருப்பது கண்டிக்கத்தக்கது என்று அவர் கூறினார். இது தொடர்பாக பாஜக நிர்வாகிகள் கைது செய்யப்பட்டிருப்பது சட்டத்திற்கு புறம்பானது என்று அவர் குற்றம் சாட்டியுள்ளார்.