புகைப்படத்தை காட்டி மிரட்டல்: பெண்ணை கத்தியால் குத்திவிட்டு வடமாநில வாலிபர் தற்கொலை

தூத்துக்குடியில் வேலை செய்து வரும் அசாம் மாநில வாலிபர் ஒருவர், சக பெண் ஊழியர் ஒருவருடன் இணைந்து எடுத்த புகைப்படங்களை தனது செல்போனில் காட்டி அப்பெண்ணை மிரட்டியுள்ளார்.
வடமாநில வாலிபர் தற்கொலை
Published on

தூத்துக்குடி,

தூத்துக்குடி மாவட்டம், ஓட்டப்பிடாரம் அருகே தனியார் ஏற்றுமதி நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த வடமாநில வாலிபர், சக பெண் தொழிலாளியை கத்தியால் குத்திவிட்டு தன்னைத் தானே குத்திக் கொண்டு தற்கொலை செய்து கொண்டார்.

இணைந்து எடுத்த புகைப்படத்தை காட்டி மிரட்டல்

அசாம் மாநிலம் டின்சுகியா பகுதியைச் சேர்ந்த அலபிச் ஹேமராம் (வயது 35), மேலஅரசரடி தனியார் நிறுவனத்தில் தொழிலாளியாக வேலை செய்து வந்தார். அதே நிறுவனத்தில் அசாம் மாநிலத்தைச் சேர்ந்த மாதுரி குவாலா(33) என்ற பெண்ணும் பணியாற்றி வருகிறார். இவர்கள் இருவரும் இணைந்து எடுத்த புகைப்படங்களை செல்போனில் காட்டி மாதுரி குவாலாவை அலபிச் ஹேமராம் மிரட்டியதாகக் கூறப்படுகிறது.

பெண்ணுக்கு கத்திக்குத்து; வாலிபர் தற்கொலை

இதனால் இவர்களுக்குள் ஏற்பட்ட தகராறை சக ஊழியர்கள் சமாதானம் செய்துள்ளனர். இதன் தொடர்ச்சியாக மீண்டும் ஏற்பட்ட மோதலில், அலபிச் ஹேமராம் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் மாதுரி குவாலாவை குத்தியுள்ளார். சத்தம் கேட்டு தடுக்க வந்த சக தொழிலாளர்களான இத்வார்சுரேன், சோனு பிரியா ஆகியோரையும் கத்தியால் குத்தியதில் அவர்களுக்கு லேசான காயம் ஏற்பட்டது. பின்னர் அலபிச் ஹேமராம் தன்னைத் தானே கத்தியால் குத்திக்கொண்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

போலீசார் விசாரணை

படுகாயமடைந்த அலபிச் ஹேமராம் மற்றும் மாதுரி குவாலா ஆகிய 2 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அலபிச் ஹேமராமை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். மாதுரி குவாலாவுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் குறித்து புதியம்புத்தூர் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com