தஞ்சாவூர் அருகே கியாஸ் சிலிண்டர் வெடித்து 3 பேர் பலி: இந்திய கம்யூனிஸ்ட் கட்சி இரங்கல்

உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு தமிழ்நாடு அரசு ரூ 10 லட்சம் இழப்பீடு வழங்கிட வேண்டும்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி
Published on

சென்னை,

தஞ்சாவூர் அருகே கியாஸ் சிலிண்டர் வெடித்து 3 பேர் உயிரிழந்த சம்பவத்திற்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி இரங்கல் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-

தஞ்சாவூர் மாவட்டம் திருவோணம் அருகே  உஞ்சியவிடுதி சின்ன அம்மன்குடி கிராமத்தில்  கடந்த வியாழன் அன்று   வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் கியாஸ் சிலிண்டர் வெடித்து சிதறியதில் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 3 பேர் இன்று இறந்துவிட்டனர் என்ற செய்தி மிகுந்த துயரத்தை தருகிறது.

விவசாய  கூலித்தொழிலாளியான முருகையன் (50) வீட்டில்  கடந்த வியாழக்கிழமை அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில் கியாஸ் சிலிண்டர் வெடித்துச் சிதறியது. இதில் தீயை அணைக்க முயன்ற முருகையனின் மனைவி செல்வி (45), மகள் அபிநயா (18), அப்பகுதியைச் சோ்ந்த காசிவேல் (45), ராஜசேகா் (45), அப்புராஜ் மகன் பழனிவேல் (37), வேம்பையன் (45), இவரது மனைவி கலையரசி (38) ஆகியோா் பலத்த காயமடைந்து, தஞ்சாவூா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சோ்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளனர்.

இரங்கல்

இதில் பழனிவேல், காசிநாதன், வேம்பையன் ஆகிய மூன்று பேரும் சிகிச்சை பலனின்றி இன்று பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தோருக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அஞ்சலியை செலுத்துகிறது. அவர்களின் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலையும் ,ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறது. உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு தமிழ்நாடு அரசு ரூ 10 லட்சம் இழப்பீடு வழங்கிட வேண்டும்.

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அனைவரும் விரைவில் குணமடைய விழைகிறது .

சிகிச்சை பெறுவோருக்கு தரமான இலவச சிகிச்சையை தமிழ்நாடு அரசு வழங்கிட வேண்டுமென இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு கேட்டுக் கொள்கிறது.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com