

வெள்ளகோவில்
கோவை மாவட்டம் வெள்ளலூர் அண்ணா நகரைச் சேர்ந்தவர் மயில்சாமி (39). தனது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் 6 பேருடன் ஒரு காரில்,சாமி கும்பிட கும்பகோணம் கோயிலுக்குச் சென்று கொண்டிருந்தனர். இன்று அதிகாலை 4.30 மணிக்கு, வெள்ளகோவில் அருகே தேசிய நெடுஞ்சாலையில் ஓலப்பாளையம் அருகே சாலையோரம் பழுதாகி நின்று கொண்டிருந்த லாரியின் பின்புறம் அவர்கள் சென்ற கார் மோதியது.
இதில், காரின் ஒரு பகுதி முழுவதுமாக லாரிக்குள் புகுந்தது . இதில் காரை ஓட்டி வந்த மயில்சாமி, அவருடைய மனைவி இந்து (37), உறவினர் கவுசல்யா (60) ஆகிய மூவர் சம்பவ இடத்திலேய உயிரிழந்தனர். இவர்களது உடல் காங்கேயம் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது.
மயில்சாமி மகன் கவுதம் (12), மகள் ரம்யா (10), மயில்சாமியின் தங்கை கலைவாணி (35) ஆகியோர் படுகாயத்துடன் உயிர் தப்பினர். இவர்கள் திருப்பூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது தொடர்பாக வெள்ளகோவில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.