

வடக்கு காஷ்மீரின் பந்திப்போரா மாவட்டத்தில் உள்ள ஹாஜின் பகுதியில் ஜீலம் ஆற்றில் தவறி விழுந்த 3 வாலிபர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சந்திரகீர் கிராமத்தைச் சேர்ந்த சமீர் அகமது தார் (22), சொஹைல் அகமது தார் (22), ஆதில் அகமது தார் (18) ஆகியோர் ஜீலம் ஆற்றங்கரையில் துணி துவைத்துக் கொண்டிருந்தபோது, ஒருவர் எதிர்பாராத விதமாக வழுக்கி ஆற்றில் விழுந்தார். அவரைக் காப்பாற்ற முயன்ற மற்ற 2 பேரும் வெள்ளநீரில் சிக்கி அடித்துச் செல்லப்பட்டனர்.
தகவல் அறிந்த போலீசார், உள்ளூர் மக்கள் மற்றும் தன்னார்வலர்கள் இணைந்து பல மணி நேரம் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். பின்னர் 3 பேரின் உடல்களும் மீட்கப்பட்டன.இந்த சம்பவத்திற்கு மனோஜ் சின்ஹா மற்றும் உமர் அப்துல்லா ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளனர். உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் வழங்க அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.