

விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் அருகே கொத்தனூர் ரைஸ்மில் தெருவை சேர்ந்தவர் பஞ்சாட்சரம் மகன் மோகன்ராஜ் (வயது 20). இவர் மீது திருவெண்ணெய்நல்லூர் பகுதியில் குற்ற வழக்குகள் உள்ளன. கடந்த மாதம் 4-ந் தேதியன்று கொத்தனூர் புதுமனை தெருவில் வசித்து வந்த தனது நண்பரான கலியபெருமாள் மகன் ராமச்சந்திரனை, மோகன்ராஜ் உள்ளிட்ட 3 பேர் சேர்ந்து கொலை செய்தனர். இதுதொடர்பாக மோகன்ராஜ் கைது செய்யப்பட்டு கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். தொடர்ந்து, இவர் குற்ற சம்பவங்களில் ஈடுபட்டு வந்ததால் இவருடைய செயல்களை தடுக்கும்பொருட்டு குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய கலெக்டருக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதா பரிந்துரை செய்தார். அதன்பேரில் மோகன்ராஜை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யும்படி போலீஸ் சூப்பிரண்டுக்கு மாவட்ட கலெக்டர் சி.பழனி உத்தரவிட்டார். இதையடுத்து மோகன்ராஜை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் திருவெண்ணெய்நல்லூர் போலீசார் நேற்று கைது செய்தனர். இதற்கான உத்தரவு நகல், கடலூர் சிறையில் இருக்கும் அவருக்கு சிறை அலுவலர்கள் மூலம் வழங்கப்பட்டது.