கல்குவாரிக்கு ‘பெர்மிட்' வழங்கும் விவகாரம்: எடப்பாடி பழனிசாமிக்கு துரைமுருகன் பதில்

கல்குவாரிக்கு ‘பெர்மிட்' வழங்கும் விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமியின் குற்றச்சாட்டுக்கு துரைமுருகன் பதில் தெரிவித்துள்ளார். குத்தகைதாரர்கள் 3 நாட்களுக்கு ஒரு முறை அலுவலகம் வரவேண்டிய அவசியம் இல்லை என்று கூறியுள்ளார்.
கல்குவாரிக்கு ‘பெர்மிட்' வழங்கும் விவகாரம்: எடப்பாடி பழனிசாமிக்கு துரைமுருகன் பதில்
Published on

சென்னை,

இதுதொடர்பாக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது:-

கல்குவாரி

கனிமவளத்துறை என்ற துறை இருந்ததை முதல்-அமைச்சராக இருந்த காலத்தில் மொத்தமாக ஒருவருக்கே குத்தகை விட்டுவிட்டு முன்னாள் முதல்-அமைச்சரும், தற்போதைய எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமிக்கு இந்த அளவுக்கு இந்த துறையை பற்றி யார் மூலமோ தெரிந்துகொண்டு அறிக்கை விட்டிருப்பதே பெரிய விஷயம்தான்.

கல்குவாரி நடத்துகிறவர்கள் ஆண்டுக்கு எவ்வளவு யூனிட் ஜல்லி உற்பத்தி செய்யப்போகிறோம் என்பதை விரிவான சுரங்கத்திட்டம் மூலம் அரசுக்கு தெரிவித்த பின்னர்தான் அவர்களுக்கு அனுமதி வழங்கப்படுகிறது. ஆண்டுக்கு மொத்தமாக அந்த திட்டத்தில் குறிப்பிடப்பட்ட யூனிட்களுக்கு அரசாங்கத்துக்கு அவர்கள் பணம் செலுத்த வேண்டும். அந்த 12 மாதத்திற்குரிய யூனிட்களை மொத்தமாக கணக்கிட்டு அதற்குரிய தொகையை மாதாமாதம் செலுத்தி பெர்மிட்' பெற்றுக்கொள்வது வழக்கம்.

குற்றவியல் நடவடிக்கை

ஆனால், இவர் கல்குவாரி குத்தகைதாரர்களுடன் முந்தைய காலத்தில் ஏற்பட்ட தொடர்பின் காரணமாக 12 மாதத்திற்குரிய தொகையை முழுவதையும் கட்டிவிடக்கூடாது என்றும், அரசுக்கு வருவாய் வந்துவிடக்கூடாது என்றும் மகத்தான நல்லெண்ணத்துடன் ஒரு நொண்டி காரணத்தை சொல்லி இருக்கிறார் முன்னாள் முதல்-அமைச்சர். அதாவது, பண்டிகை காலங்களில், குவாரிகளில் வேலை செய்கிறவர்கள் ஊருக்கு போய்விடுவார்களாம், அதனால் உற்பத்தி குறைந்து போகுமாம், அந்த நிலையிலும் அந்த மாதத்திற்குரிய தொகையை கட்டுகிறார்களாம் என்று குவாரிதாரர்களுக்காக பச்சாதாபப்படுகிறார்.

15 நாட்கள் அல்லது ஒரு மாதத்திற்கு ஒருமுறை பெர்மிட் வழங்குவது அ.தி.மு.க. ஆட்சியில் நடைமுறையில் இருந்தது. இதில் என்ன ஒரு தில்லுமுல்லு என்றால் 15 நாட்களுக்கு வழங்கிய பெர்மிட்டில், ஒரு குறிப்பிட்ட நாளுக்கான பெர்மிட்டையே 15 நாட்களுக்கும் பயன்படுத்த வாய்ப்புள்ளது. அவ்வாறு ஒரே பெர்மிட்டை வைத்து பலமுறை முறைகேடாக கனிமம் கொண்டுசென்ற வாகனங்களை சமீபத்தில் இந்த துறையின் இயக்குனரே நேரில் சென்று கைப்பற்றி அதன் மீது குற்றவியல் நடவடிக்கை தொடரப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

3 நாட்களுக்கு ஒரு முறை...

15 நாட்கள் அல்லது ஒரு மாதத்திற்கு ஒரு முறை வழங்கப்பட்டு வந்த பெர்மிட் முறை தற்போது 3 நாட்களுக்கு ஒரு முறை என மாற்றப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள தகவல் உண்மையல்ல. தற்போதைய நடைமுறை மாற்றம் என்னவென்றால், குத்தகைதாரர்களுக்கு வழங்கப்படும் மொத்த பெர்மிட்டின் எண்ணிக்கைக்கேற்ப கால அவகாசம் 3 நாட்களுக்கு செல்லத்தக்க வகையில் பகுதி பகுதியாக மொத்தம் 15 நாட்களுக்கு ஒரே முறையில் வழங்கப்பட்டு வருகிறது.

எனவே, குத்தகைதாரர்கள் 3 நாட்களுக்கு ஒரு முறை அலுவலகத்திற்கு வந்து பெர்மிட் பெறவேண்டும் என்ற அவசியம் ஏதுமில்லை. எடப்பாடி பழனிசாமிக்கு இப்போது புரிந்திருக்கும் என்று கருதுகிறேன். எடப்பாடி பழனிசாமி அவருடைய சுபாவத்துக்கு மாறுபட்டு இந்த அரசை விடியாஅரசு, ஆளுங்கட்சியை கவனித்துவிட்டு, அரசுக்கு வரவேண்டிய வருவாய் எங்கே போகிறது என்றெல்லாம் கடினமான சொற்களை பயன்படுத்தி இருக்கிறார். அவர் விரும்பினால் முந்தைய 10 ஆண்டுகளில் இந்த துறையின் கதைகளை விளக்க தயாராக இருக்கிறேன். மொட்டை பெட்டிஷன்' மீது எல்லாம் அரசு முடிவு எடுத்து இருக்கிறது என்கிறார் எதிர்க்கட்சி தலைவர். மொட்டை பெட்டிஷனிலும்' பெட்டி சமாசாரம் நிறையவே உள்ளதே எதிர்க்கட்சி தலைவரே.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com