

சென்னை,
தமிழக சட்டசபையில் செய்தி மற்றும் விளம்பரத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதங்களுக்கு பதிலளித்து அந்த துறையின் அமைச்சர் கடம்பூர் ராஜூ பேசியதாவது:-
தமிழ், தமிழ் என்று பேசிக் கொண்டிருப்போர் மத்தியில் தமிழ் வளர்க்கும் அரசாக தமிழ் வளர்க்கப் பாடுபட்ட பெரியோரை பெருமைப்படுத்தும் அரசாக ஜெயலலிதாவின் அரசு திகழ்ந்து கொண்டிருக்கிறது.
நாளிதழால் தமிழ் வளர்த்து ஏழை-எளியோரும் நல்ல தமிழ் பேசவும், படிக்கவும் வைத்த தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனார் பிறந்தநாளை அரசு விழாவாக கொண்டாட முதல்-அமைச்சர் ஆணையிட்டார்.
தரணி போற்றும் தந்தையின் வழி நின்று தனது வாழ்நாள் முழுவதும் தொடர்ந்து தமிழ் தொண்டாற்றிய பா.சிவந்தி ஆதித்தனார் நினைவாக திருச்செந்தூரில் ரூ.1 கோடியே 34 லட்சம் செலவில் மணிமண்டபம் அமைக்க முதல்-அமைச்சர் ஆணையிட்டார். இதன் கட்டுமான பணிகள் விரைந்து முடிக்கப்பட்டு முதல்-அமைச்சரால் விரைவில் திறந்து வைக்கப்படும் என்பதை இப்பேரவைக்கு மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
அந்த போல, கடலூர் மாவட்டம் மஞ்சகுப்பத்தில் ராமசாமி படையாச்சியார் நினைவு மண்டபம் அமைக்கும் பணிகள் சிறப்புடன் முடிக்கப்பட்டுள்ளன. இந்த மண்டபமும் விரைவில் முதல்-அமைச்சரால் திறந்து வைக்கப்படும். தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் இசைமேதை நல்லப்ப சுவாமி நினைவுத்தூண் அமைக்கும் பணியும், தர்மபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டியில் பாரதமாதா நினைவாலயம் அமைக்கும் பணிகளும் விரைந்து நடைபெற்று வருகின்றன. இவ்வாறு அவர் பேசினார்.