திருச்செந்தூர்: அம்மிக்கல்லால் தாக்கி மூதாட்டி கொடூர கொலை- மகன் கைது

திருச்செந்தூர் அருகே தாயை அம்மிக்கல்லால் அடித்துக் கொன்று, அண்ணனுக்கு வாட்ஸ்அப்பில் படம் அனுப்பி அதிர்ச்சியை ஏற்படுத்திய மகனை போலீசார் கைது செய்தனர்.
மூதாட்டி கொலை, மகன் கைது
Published on

தூத்துக்குடி,

திருச்செந்தூர் அருகே ஓய்வுபெற்ற கல்லூரி பேராசிரியையான தாயை அம்மிக்கல்லால் அடித்து கொலை செய்து, அண்ணனுக்கு வாட்ஸ்அப்பில் படம் அனுப்பி அதிர்ச்சியை ஏற்படுத்திய மகனை போலீசார் கைது செய்தனர்.

மனநலம் பாதிப்பு, சிகிச்சை

தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் அருகே உள்ள குமாரபுரம் ஜெயா நகரைச் சேர்ந்தவர் அன்புமணி. இவரது மனைவி ரேணுகா (வயது 62), ஓய்வுபெற்ற கல்லூரி பேராசிரியை. இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். மூத்த மகன் சென்னையில் காவல்துறையில் பணியாற்றுகிறார். இளைய மகன் தங்க பாலன்(27). இவர் மனநலம் பாதிக்கப்பட்டு கடந்த 3 ஆண்டுகளாக சிகிச்சை பெற்று வருகிறார்.

அம்மிக்கல்லால் அடித்து மூதாட்டி கொலை

நேற்று காலை அன்புமணி பள்ளத்தூர் கிராமத்தில் உள்ள தனது குலதெய்வ கோவிலுக்குச் சென்றிருந்தார். அப்போது வீட்டில் தாயுடன் தனியாக இருந்த தங்க பாலன், திடீரென வீட்லிருந்த அம்மிக்கல்லை எடுத்து, தாய் ரேணுகாவின் தலையில் அடித்து கொடூரமாகக் கொலை செய்தார். மேலும் இந்த சம்பவத்தை தனது அண்ணனுக்கு வாட்ஸ்அப்பில் புகைப்படமாக எடுத்து அனுப்பி அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளார்.

மகன் கைது

இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற திருச்செந்தூர் தாலுகா போலீசார், உயிரிழந்த ரேணுகாவின் சடலத்தைக் கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக திருச்செந்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கைது செய்யப்பட்ட தங்க பாலன் தற்போது அரசு மருத்துவமனையில் காவல் துறையினரின் கண்காணிப்பில் சிகிச்சையில் வைக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com