சேவுக பெருமாள் அய்யனார் கோவிலில் திருக்கல்யாண வைபவம்

சிங்கம்புணரி சேவுக பெருமாள் அய்யனார் கோவிலில் திருக்கல்யாண வைபவம் நடந்தது.
சேவுக பெருமாள் அய்யனார் கோவிலில் திருக்கல்யாண வைபவம்
Published on

சிங்கம்புணரி

சிங்கம்புணரி சேவுக பெருமாள் அய்யனார் கோவிலில் திருக்கல்யாண வைபவம் நடந்தது.

கும்பாபிஷேகம்

சிங்கம்புணரியில் பிரசித்தி பெற்ற சிவகங்கை சமஸ்தானம் தேவஸ்தானத்துக்கு உட்பட்ட பிரசித்தி பெற்ற பூரண புஷ்கலை உடனாகிய சேவுகப் பெருமாள் அய்யனார் கோவில் உள்ளது. இக்கோவில் கும்பாபிஷேக விழா 21 ஆண்டுகளுக்கு பின் நேற்று சிறப்பாக நடைபெற்றது. இதையொட்டி விக்னேஸ்வர பூஜை, கணபதி ஹோமம், முதல் கால பூஜை, பூர்ணா குதி உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்தது. நேற்று நடந்த கும்பாபிஷேக விழாவில் சிவகங்கை சமஸ்தானம் தேவஸ்தானம் பரம்பரை அறங்காவலர் ராணி மதுராந்தகி நாச்சியார், முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம், குன்றக்குடி பொன்னம்பல அடிகளார், திருப்பணிக்குழு தலைவர் ராம அருணகிரி மற்றும் பல்வேறு முக்கிய பிரமுகர்கள், ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

தொடர்ந்து அன்று மாலை பூரண புஷ்கலை உடனாகிய சேவுகப் பெருமாள் அய்யனார் திருக்கல்யாண வைபோக நிகழ்ச்சி நடைபெற்றது. முன்னதாக கோவில் மண்டபத்தில் உற்சவமூர்த்திகள் மலர் மாலைகளுடன் அலங்காரம் செய்யப்பட்டு மண்டபத்தில் அமர்த்தப்பட்டனர்.

திருக்கல்யாணம்

அடைக்கலம் காத்த நாட்டார்கள், சிங்கம்புணரி கிராமத்தார்கள், பொதுமக்கள் முன்னிலையில் நடைபெற்ற திருமண வைபோக நிகழ்ச்சியை 15-க்கும் மேற்பட்ட பரம்பரை ஸ்தானிகம் சிவாச்சாரியார்கள் நடத்தினார்கள். முன்னதாக சுவாமிக்கு மாலை மாற்றும் வைபோக நிகழ்ச்சி நடைபெற்றது. தொடர்ந்து சிவாச்சாரியார்கள் திருமாங்கல்யம் அணிவிக்கும் நிகழ்ச்சி நடந்தது. பக்தர்கள் மலர் தூவி வழிபட்டனர். நிகழ்ச்சியின்போது பெண்களுக்கு மாங்கல்ய கயிறு வழங்கப்பட்டு மாங்கல்ய கயிற்றை மாற்றிக்கொண்டனர்.

இரவு பல்வேறு அமைப்புகள், கிராமத்தார்கள் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது. தொடர்ந்து சிங்கம்புணரி அக்னி சிறகுகள் சார்பில் தனியார் தொலைக்காட்சி புகழ், செந்தில் கணேஷ், ராஜலட்சுமி குழுவினரின் இன்னிசை நிகழ்ச்சி நடைபெற்றது. விழா ஏற்பாடுகளை சிவகங்கை சமஸ்தானம் தேவஸ்தானம் மற்றும் சிங்கம்புணரி அடைக்கலம் காத்த நாட்டார்கள் கிராமத்தார்கள் செய்திருந்தனர். 

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com