

திருநெல்வேலி,
திருநெல்வேலி மாவட்டம், களக்காடு பகுதியில் 16 கிலோ புகையிலைப் பொருட்களை பறிமுதல் செய்த போலீசார், 3 பேரை கைது செய்து 2 பைக்குகளை பறிமுதல் செய்தனர்.
திருநெல்வேலி மாவட்ட எஸ்.பி. உத்தரவின்படி, மாவட்டத்தில் சட்ட விரோதமாக புகையிலைப் பொருட்கள் விற்பனை செய்வதைத் தடுக்கும் வகையில் போலீசார் தீவிர கண்காணிப்பு மற்றும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் தொடர்ச்சியாக, நேற்று மாலை, களக்காடு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கதிரேசன் தலைமையிலான போலீசார், நெடுவிளை இசக்கி அம்மன் கோவில் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது சந்தேகப்படும்படி வகையில் இருசக்கர வாகனத்தில் வந்த நபர்களை நிறுத்தி போலீசார் சோதனை செய்ததில், அவர்கள் சட்டவிரோதமாக விற்பனை செய்வதற்காக புகையிலைப் பொருட்கள் வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து, கிருஷ்ணாபுரம் பகுதியைச் சேர்ந்த கோமதிசங்கர் (வயது 47), நெடுவிளை பகுதியைச் சேர்ந்த ஞானதாஸ்(40), பத்மநேரி பகுதியைச் சேர்ந்த பேச்சிமுத்து(58) ஆகிய 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
அவர்களிடமிருந்து சுமார் 16 கிலோ எடையுள்ள புகையிலைப் பொருட்கள் மற்றும் 2 இருசக்கர வாகனம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. இதுகுறித்து களக்காடு காவல் நிலைய இன்ஸ்பெக்டர் கண்ணா காந்தி வழக்குப்பதிவு செய்து, 3 பேரையும் கைது செய்தார்.
புகையிலைப் பொருட்களின் சட்டவிரோத விற்பனை மற்றும் பயன்பாட்டைத் தடுக்கும் வகையில் திருநெல்வேலி மாவட்ட போலீசாரின் நடவடிக்கைகள் தொடர்ந்து தீவிரமாக மேற்கொள்ளப்படும் என்று மாவட்ட காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.