திருநெல்வேலி: அரசு பள்ளி மாணவிகளுக்கு சைபர் குற்றங்கள் குறித்து விழிப்புணர்வு

பெருகி வரும் சைபர் குற்றங்களிலிருந்து தங்களை எவ்வாறு பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்று போலீசார் சேரன்மகாதேவி அரசு பள்ளி மாணவிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
திருநெல்வேலி மாவட்ட எஸ்.பி. சிலம்பரசன் அறிவுறுத்தலின் பேரில் சைபர் குற்றங்களிலிருந்து பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவியர்கள் மற்றும் பொது மக்கள் தங்களை எவ்வாறு பாதுகாத்துக் கொள்வது குறித்து தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.
இதன் ஒரு பகுதியாக திருநெல்வேலி மாவட்டம், சேரன்மகாதேவி அரசு மகளிர் உயர்நிலைப் பள்ளி மாணவிகள் மத்தியில் திருநெல்வேலி மாவட்ட சைபர் கிரைம் ஏ.டி.எஸ்.பி. முருகன் பேசியபோது, "பெண்கள் சமூக வலைதளங்களில் தங்களது புகைப்படங்களை பதிவேற்றம் செய்வதால் ஏற்படும் விளைவுகள் குறித்தும், வங்கிக் கணக்குகளின் ரகசிய எண்களை யாரிடமும் பகிர்ந்து கொள்ளக்கூடாது என்றும், முகாந்திரம் இல்லாமல் தெரியாத நபர்களிடம் இருந்து வரும் குறுஞ்செய்தி மற்றும் வீடியோ அழைப்புகளை ஏற்க வேண்டாம் என்றும், ஆன்லைன் வர்த்தக தளத்தில் பொருட்களை வாங்கும் போது கவனமுடன் பொருட்களை வாங்க வேண்டும் என்றும், பரிசுப் பொருள்கள் விழுந்துள்ளதாக வரும் எந்த ஒரு அழைப்புக்கள் மற்றும் குறுஞ்செய்திகள், லிங்க்குகளுக்கு பதில் அளிக்க வேண்டாம் என்றும், உதவி தொகை மோசடி, நிதி மோசடி சம்பந்தமான குற்றங்களுக்கு தொடர்பு கொள்ள வேண்டிய இலவச உதவி எண் 1930 மற்றும் http://cybercrime.gov.in என்ற இணையதள முகவரியில் புகார் அளிக்கலாம் என்றும், பெருகி வரும் சைபர் கிரைம் குற்றங்களிலிருந்து தங்களை எவ்வாறு பாதுகாத்துக் கொள்ள வேண்டும், சமூக வலைதளங்களை எவ்வாறு கையாள வேண்டும் என்பது குறித்தும் எடுத்துரைத்து" விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.






