

திருநெல்வேலி மாவட்டத்தில் ம.தி.தா. இந்துக் கல்லூரி, தூய யோவான் கல்லூரி, தூய சவேரியார் கல்லூரி, சதக்கத்துல்லா கல்லூரி, TDMNS கல்லூரிகளின் வாயில்களின் முன் கல்லூரி ஆசிரியர்கள் மனித சங்கிலிப் போராட்டம் நடத்தினர்.
தமிழக அரசு ஆணையை (G.O.No.5-11.01.2021) முழுமையாக அமல்படுத்திட நான்கு ஆண்டுகளுக்கும் மேலாகத் தொடரும் போராட்டங்களின் வரிசையில் மீண்டும் நான்கு கட்டப் போராட்டங்கள் நடத்த அரசு உதவி பெறும் கல்லூரி ஆசிரியர்கள் முடிவு செய்துள்ளனர். அதில் முதலாவதாக திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள கல்லூரிகளின் வாயில்கள் முன் மனிதச் சங்கிலி- கண்டன ஆர்ப்பாட்டம் நேற்று நடைபெற்றது.
இந்த போராட்டத்தில் பெண் பேராசிரியர்கள் உள்பட 200க்கும் மேற்பட்ட பேராசிரியர்கள் கலந்து கொண்டனர். போராட்டத்தில் அரசு, அரசு உதவி பெறும் கல்லூரி என அரசியல் அமைப்புச் சட்டத்திற்கு மாறாகத் தொடரும் பாகுபாட்டை நிறுத்தக் கோரியும், அரசுக் கல்லூரி ஆசிரியர்களுக்கு வழங்கி வருவது போல், அரசு உதவி பெறும் கல்லூரி ஆசிரியர்களுக்கும் பணி மேம்பாட்டுப் பலன்களை உடனே வழங்கிட வலியுறுத்தியும், அரசு ஆணை அமல்படுத்தப்படாத அலட்சியத்தால் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவியரின் ஆய்வு செய்யும் வாய்ப்பு இழப்பை இப்போதேனும் சரி செய்திடக் கோரியும் முழக்கங்களை எழுப்பினர்.