திருநெல்வேலி: சிறுமியை பாலியல் சீண்டல் செய்தவருக்கு 5 ஆண்டுகள் சிறை

திருநெல்வேலி மாவட்டத்தில் 2025-ம் ஆண்டில் இதுவரை 18 போக்சோ வழக்குகளில் ஈடுபட்ட 19 குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்று தரப்பட்டுள்ளது.
திருநெல்வேலி மாவட்டம், நாங்குநேரி அருகே கடந்த 2020-ம் ஆண்டு, திருக்குறுங்குடியை சேர்ந்த கருப்பசாமி (வயது 52) என்பவர் அதே பகுதியைச் சேர்ந்த சிறுமி ஒருவரிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார்.
இதுகுறித்து பாதிக்கப்பட்ட சிறுமியின் தாய் நாங்குநேரி காவல் நிலையத்தில் புகார் அளித்ததன் பேரில், காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து, புலன் விசாரணை மேற்கொண்டு, கருப்பசாமியை கைது செய்தனர்.
இந்த வழக்கு விசாரணை திருநெல்வேலி மாவட்ட போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், நீதிபதி சுரேஷ்குமார் வழக்கை விசாரித்து, நீதிமன்ற விசாரணை முடிவுற்ற நிலையில், குற்றவாளிக்கு எதிரான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டு, நேற்று முன்தினம் கருப்பசாமிக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ.2 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பு வழங்கினார். மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ஒரு லட்சம் ரூபாய் நிவாரணத்தொகை வழங்க உத்தரவிட்டு தீர்ப்பளித்தார்.
இந்த வழக்கில் திறம்பட புலன் விசாரணை செய்த போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜகுமாரி (தற்போது மூலக்கரைப்பட்டி காவல் நிலையம்), சாட்சிகளை விரைவாக நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி குற்றவாளிக்கு தண்டனை பெற்றுக் கொடுத்த நாங்குநேரி உட்கோட்ட டி.எஸ்.பி. தர்ஷிகா நடராஜன், போலீஸ் இன்ஸ்பெக்டர் மங்கையர்கரசி மற்றும் காவல்துறையினர், குற்றவாளிக்கு தண்டனை பெற்றுத்தர திறம்பட வாதிட்ட அரசு வழக்கறிஞர் உஷா ஆகியோரை திருநெல்வேலி மாவட்ட எஸ்.பி. சிலம்பரசன் பாராட்டினார்.
திருநெல்வேலி மாவட்ட காவல்துறையினரின் துரித நடவடிக்கையால் 2025 -ம் ஆண்டில் மட்டும், இதுவரை 18 போக்சோ வழக்குகளில் ஈடுபட்ட 19 குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்று தரப்பட்டுள்ளது. அதில் குறிப்பிடத்தக்க வகையில் ஒரு குற்றவாளிக்கு 25 ஆண்டுகள் சிறை தண்டனையும், 4 நபர்களுக்கு ஆயுள் தண்டனையும், ஒரு சரித்திர பதிவேடு குற்றவாளிக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனையும் பெற்று தரப்பட்டுள்ளது.






