

திருநெல்வேலி மாவட்டம், வடக்கன்குளத்தைச் சேர்ந்த நாகராஜன் மனைவி ஜெனிட்டா (வயது 58). இவர் சம்பவத்தன்று பகலில் அத்தியாவசிய வேலைக்காக வெளியே சென்று விட்டு பின்னர் தனது வீட்டுக்கு திரும்பி வந்தார். தொடர்ந்து அவர் அணிந்திருந்த 20 சவரன் நகைகளை கழட்டி மேஜையில் வைத்து விட்டு சிறிது நேரம் தூங்கினார்.
அப்போது அவரது வீட்டுக்குள் நைசாக நுழைந்த மர்ம நபர், மேஜையில் இருந்த 20 சவரன் நகைகளை திருடிச் சென்றார். சிறிது நேரத்தில் கண் விழித்த ஜெனிட்டா நகைகள் திருடு போனதை அறிந்து அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்த புகாரின்பேரில், பணகுடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அதே பகுதியைச் சேர்ந்த செலினா(58) என்பவர் ஜெனிட்டாவின் வீட்டுக்குள் புகுந்து நகைகளை திருடியது தெரிய வந்தது. இவர்கள் 2 பேரின் வீடுகளும் அருகருகே உள்ளன. எனவே அவர்கள் நட்புடன் தோழிகளாக பழகி வந்தனர்.
சம்பவத்தன்று தோழி ஜெனிட்டாவை பார்க்க செலினா சென்றபோது, அவர் நகைகளை கழட்டி மேஜையில் வைத்து விட்டு தூங்கியதும், இதனால் அவர் நகைகளை நைசாக திருடிச் சென்றதும் தெரிய வந்தது. எனவே செலினாவை போலீசார் கைது செய்தனர். அவர் அடமானம் வைத்த நகைகளையும் மீட்க ஏற்பாடு செய்தனர்.