

திருநெல்வேலி,
திருநெல்வேலி மாவட்டம், தேவர்குளம் காவல் நிலைய பகுதியில் அரசு பள்ளி அருகே, 260 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார் ஒரு வாலிபரை கைது செய்தனர்.
திருநெல்வேலி மாவட்டம், தேவர்குளம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வன்னிகோனந்தல் அரசு மேல்நிலைப்பள்ளி அருகே கஞ்சா விற்பனை செய்வதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில், காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கே சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்த தென்காசி மாவட்டம், புளியங்குடி, இந்திராநகர் பகுதியைச் சேர்ந்த சரவணதாஸ் (வயது 19) என்பவரை பிடித்து போலீசார் சோதனை செய்தனர்.
அப்போது அவர் அரசால் தடை செய்யப்பட்டு மனித உயிருக்கு தீங்கு விளைவிக்கக்கூடிய 260 கிராம் கஞ்சாவை விற்பனை செய்வதற்காக பதுக்கி வைத்திருந்தது கண்டறியப்பட்டது. இதையடுத்து தேவர்குளம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து, சரவணதாஸை கைது செய்து, அவரிடமிருந்து 260 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர். மேலும் அவரை நீதிமன்றக் காவலில் ஒப்படைக்க நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.