திருப்பதி-காட்பாடி இடையே ரூ.1,300 கோடியில் இரட்டை ரெயில் பாதை - மத்திய அரசு ஒப்புதல்

கோப்புப்படம்
பிரதமர் மோடியின் புதிய இந்தியா என்ற தொலைநோக்குப் பார்வைக்கு ஏற்ப இந்தத் திட்டம் அமைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதுடெல்லி,
திருப்பதி - பகாலா - காட்பாடி இடையேயான 104 கிலோ மீட்டர் ஒரு வழி ரெயில் பாதையை, இரு வழி ரெயில் பாதையாக மாற்றும் ரூ.1,332 கோடி செலவிலான திட்டத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழு ஒப்புதல் அளித்துள்ளது.
முன்னதாக பிரதமர் மோடி தலைமையில், பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய மந்திரிசபை கூட்டம் நடைபெற்றது. இதில் பல்வேறு முக்கிய திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதுபற்றி ரெயில்வே மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் கூறுகையில், "திருப்பதி-காட்பாடி இடையே 104 கி.மீ. தொலைவு உள்ள ஒருவழி ரெயில் பாதையை, ரூ.1,332 கோடி செலவில் இரட்டை ரெயில் பாதையாக மாற்றுவதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.
பிரதமர் மோடியின் புதிய இந்தியா என்ற தொலைநோக்குப் பார்வைக்கு ஏற்ப இந்தத் திட்டம் அமைந்துள்ளது. இதன் மூலம் இந்த பகுதிகளில் உள்ள 400 கிராமங்களை சேர்ந்த 14 லட்சம் மக்கள் பயன்பெறுவார்கள். அந்த பகுதிகளும் வளர்ச்சி பெறும். இந்த பாதை திருமலை வெங்கடேஸ்வரர் கோவிலுக்கான இணைப்புடன், காளஹஸ்தி சிவன் கோவில், கானிப்பாக்கம் விநாயகர் கோவில், சந்திரகிரி கோட்டை போன்ற பிற முக்கிய இடங்களுக்கும் சேவை அளிக்கும். இது நாடு முழுவதிலும் இருந்து சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும். ஆண்டுக்கு 40 லட்சம் டன் அளவுக்கு கூடுதல் சரக்கு போக்குவரத்தும் ஏற்படும்.
மேலும் அரியானா மாநிலத்தில் ஜிராக் பூரில் ரூ.1,878.31 கோடியில் 19.2 கி.மீ. மீட்டர் தூர புறவழிச்சாலை அமைக்கும் பணிக்கும், பிரதமரின் வேளாண் நீர்ப்பாசன திட்டத்தை நவீன மயமாக்கும் துணைத் திட்டத்துக்கு தொடக்க கால செலவாக ரூ.1,600 கோடி செலவு செய்யவும் ஒப்புதல் வழங்கப்பட்டது" என்று அவர் தெரிவித்தார்.






