

திருவண்ணாமலை,
வெம்பாக்கம் தாலுகா தூசி அருகே மாமண்டூர் கிராமம் அசோபா தெருவை சேர்ந்த அரவிந்த் (32) வீட்டில் பூட்டை உடைத்து நகை மற்றும் பணம் திருடப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அரவிந்தின் தாயார் மாமண்டூர் மெயின் ரோட்டில் மளிகை கடை நடத்தி வருகிறார். கடந்த முன்தினம் அரவிந்துக்கு உடல்நலம் சரியில்லாததால், தனது வீட்டை பூட்டிவிட்டு அருகிலுள்ள தாயார் வீட்டுக்கு சென்றிருந்தார்.
நேற்று மீண்டும் வீட்டுக்கு வந்தபோது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு, அதில் இருந்த 17 பவுன் நகை மற்றும் ரூ.1 லட்சம் பணம் திருடப்பட்டிருந்தது தெரியவந்தது.
இதுகுறித்து அரவிந்த் வந்தவாசி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, திருடர்களை தேடி விசாரணை நடத்தி வருகின்றனர்.