

சென்னை,
தமிழக சட்டசபைக்கு வருகிற ஏப்ரல் 6ந்தேதி தேர்தல் நடைபெற உள்ளது. வாக்கு எண்ணிக்கை மே 2ந்தேதி நடைபெறுகிறது. தேர்தலை முன்னிட்டு தமிழகத்தில் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன.
தேர்தல் தேதி அறிவிப்பு வெளியான நிலையில் கட்சிகளுடனான கூட்டணி, தேர்தல் பிரசாரம் மேற்கொள்வது, வேட்பாளர் தேர்வு உள்ளிட்ட பணிகளில் அரசியல் கட்சிகள் தீவிரமுடன் இறங்கி உள்ளன.
தமிழக சட்டசபை தேர்தலில் தி.மு.க. சார்பில் போட்டியிட விரும்புவோருக்கான விருப்பமனு விநியோகம் நடைபெற்று வருகிறது. இதனையடுத்து, கொளத்தூர் தொகுதியில் மீண்டும் போட்டியிட தி.மு.க. தலைவர் ஸ்டாலின் விருப்ப மனு தாக்கல் செய்துள்ளார்.
இந்த நிகழ்வில், தி.மு.க. பொதுச்செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர். பாலு மற்றும் கே.என். நேரு ஆகியோர் உடனிருந்தனர். தி.மு.க. அமைப்பு செயலாளர் ஆர்.எஸ். பாரதி விருப்ப மனுவை பெற்றுக்கொண்டார். வழக்கமாக தி.மு.க. தலைவர் பெயரில் பலர் விருப்பமனு தாக்கல் செய்யும் நிலையில், இந்த முறை ஸ்டாலினே நேரடியாக விருப்ப மனுவை தாக்கல் செய்துள்ளார்.
கடந்த இரண்டு முறையும், கொளத்தூர் தொகுதியில் நின்று வெற்றி பெற்ற ஸ்டாலின் 3வது முறையாக கொளத்தூரில் போட்டியிட விருப்ப மனு தாக்கல் செய்துள்ளார்.