

சட்டசபை கூட்டம்
தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகமாக இருந்த நேரத்தில் சென்னை புனித ஜார்ஜ் கோட்டைக்கு பதிலாக கலைவாணர் அரங்கத்தில் சட்டசபை கூட்டம் நடந்து வந்தது.
தொற்று குறைந்த நிலையில் ஜார்ஜ் கோட்டையில் வருகிற 5-ந்தேதி சட்டசபை கூட்டம் நடைபெறும் என்றும், கவர்னர் ஆர்.என்.ரவி உரையுடன் கூட்டத்தொடர் தொடங்கும் என்றும் சபாநாயகர் அப்பாவு அறிவித்திருந்தார்.
ஒமைக்ரான் பரவல் அதிகரிப்பு
இதற்கிடையே ஒமைக்ரான் பரவல் அதிகரித்து வருகிறது.
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடந்த அவசர ஆலோசனை கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி, சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன. மேலும், தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு உத்தரவு வரும் 10-ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
கலைவாணர் அரங்கத்துக்கு மாற்றம்
ஒமைக்ரான் பரவல் வேகமாக அதிகரித்து வருவதால், சமூக இடைவெளியுடன் சட்டமன்ற கூட்டம் நடத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, கூட்டத்தை மீண்டும் கலைவாணர் அரங்கத்தில் நடத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது.
அதன்படி, வருகிற 5-ந்தேதி காலை 10 மணிக்கு கலைவாணர் அரங்கத்தில் சட்டசபை கூட்டம் நடைபெற இருக்கிறது.
இதுதொடர்பாக, தமிழக சட்டசபை செயலாளர் கே.சீனிவாசன் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-
கவர்னர் அறிவிப்பு
தமிழக அரசிதழில் கடந்த மாதம் 13-ந்தேதி வெளியிடப்பட்ட அறிவிப்பில், வரும் 5-ந்தேதி தமிழக சட்டசபை கூட்டம் சென்னை புனித ஜார்ஜ் கோட்டையில் உள்ள சட்டசபை கூட்ட அரங்கில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்த கூட்டம் தற்போது ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் இருக்கும் கலைவாணர் அரங்கத்தின் 3-வது தளத்தில் உள்ள கூட்ட அரங்கில் வரும் 5-ந்தேதி காலை 10 மணிக்கு நடைபெறும் என்று கவர்னர் ஆர்.என்.ரவி அறிவித்துள்ளார்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.