

சென்னை,
நிகர்நிலை பல்கலைக்கழகமான டாக்டர் எம்.ஜி.ஆர். கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் 28-வது பட்டமளிப்பு விழா சென்னை வேலப்பன்சாவடியில் உள்ள ஏ.சி.எஸ். மருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவமனை வளாகத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற உள்ளது.
விழாவுக்கு டாக்டர் எம்.ஜி.ஆர். கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் நிறுவனர் ஏ.சி.சண்முகம் தலைமை தாங்குகிறார். நிறுவனத்தின் தலைவர் ஏ.சி.எஸ்.அருண்குமார் முன்னிலை வகிக்கிறார். இந்த பட்டமளிப்பு விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ளும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கப்படுகிறது.
விழாவில் டாக்டர் எம்.ஜி.ஆர். கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் வேந்தர் ஆர்.எம்.வாசகம் வரவேற்புரை நிகழ்த்துகிறார். பட்டமளிப்பு விழா அறிக்கையை துணைவேந்தர் கே.மீர் முஸ்தபா ஹூசைன் வாசிக்கிறார்.
ஏ.சி.சண்முகம் பட்டமளிப்பு விழா உரையாற்றுகிறார். பட்டமளிப்பு விழா தொடர்பான அறிவிப்பினையும் அவர் வெளியிடுகிறார். தொடர்ந்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வாழ்க்கை வரலாறு குறித்து வீடியோ காட்சி ஒளிபரப்பப்படுகிறது.
டாக்டர் எம்.ஜி.ஆர். கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் சார்பில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி கழகத்தின் (டி.ஆர்.டி.ஓ.) தலைவர் ஜி.சதீஷ் ரெட்டி, கங்கா ஆஸ்பத்திரியின் தலைவர் எஸ்.ராஜசபாபதி, இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ், நடிகையும், பரத நாட்டிய கலைஞருமான ஷோபனா ஆகியோருக்கும் கவுரவ டாக்டர் பட்டம் வழங்கப்படுகிறது.
பின்னர் எடப்பாடி பழனிசாமி பட்டமளிப்பு விழா உரை நிகழ்த்தி பட்டங்கள் பெற்றவர்களுக்கு சான்றிதழ்களையும், தரவரிசை பட்டியலில் இடம் பிடித்தவர்களுக்கு பதக்கங்களையும் வழங்குகிறார்.