

தி.மு.க. வழக்கு
மருத்துவ படிப்புகளில் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு இடஒதுக்கீடு கோரியது தொடர்பாக தி.மு.க. தொடர்ந்த கோர்ட்டு அவமதிப்பு வழக்கு தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி, நீதிபதி பி.டி.ஆதிகேசவலு ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.அப்போது, தி.மு.க., சார்பில் ஆஜரான மூத்த வக்கீல் பி.வில்சன், தமிழ்நாட்டில் அமலில் உள்ள 69 சதவீத இடஒதுக்கீட்டை வழங்க வேண்டும் என்று ஐகோர்ட்டு தெளிவாக உத்தரவிட்டுள்ளது. ஆனால், இதர பிறப்படுத்தப்பட்டவர்களுக்கு எப்படி 27 சதவீத இடஒதுக்கீடு வழங்க முடிவு எடுக்கப்பட்டது என்று மத்திய அரசு தெரிவிக்கவில்லை என்றார்.
69 சதவீத இடஒதுக்கீடு
மேலும், இந்த 27 சதவீத இடஒதுக்கீடு மத்திய அரசு கல்வி நிறுவனங்களுக்கு மட்டுமே பொருந்தும். அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில் மொத்த இடஒதுக்கீடு 50 சதவீதத்துக்கு மிகாமல் மாநில இடஒதுக்கீட்டை அமல்படுத்தலாம் என்று மத்திய அரசு கூறுகிறது. ஆனால், அதை மத்திய அரசே மீறும்வகையில், பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர்வகுப்பினருக்கு 10 சதவீத இடஒதுக்கீடு வழங்குகிறது. பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர்வகுப்பினருக்கு 10 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்பட்டால், தமிழகத்தில் அமலில் உள்ள எஸ்.சி. பிரிவினருக்கு 18 சதவீதம், எஸ்.டி. பிரிவினருக்கு 1 சதவீதம், இதர பிற்படுத்தப்பட்டவர்களுக்கு 50 சதவீதம் என்று 69 சதவீத இடஒதுக்கீட்டை வழங்க வேண்டும் என்று மூத்த வக்கீல் பி.வில்சன் வாதிட்டார்.
கேட்கவில்லை
மத்திய அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் கே.எம்.நடராஜன், பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர்வகுப்பினருக்கு 10 சதவீத இடஒதுக்கீடு விவகாரத்துக்குள் செல்ல விரும்பவில்லை. எஸ்.சி., எஸ்.டி. பிரிவினருக்கு 22.5 இடஒதுக்கீடு வழங்கியபின், 50 சதவீதத்துக்கு மிகாமல் 27.5 சதவீதம் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. கடந்த 1986-ம் ஆண்டு முதல் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்கள் அமலுக்கு வந்தன. தமிழகத்தில் 69 சதவீத இடஒதுக்கீடு சட்டம் 1993-ம் ஆண்டு கொண்டுவரப்பட்டது. இந்த இடஒதுக்கீட்டைப் பின்பற்ற வேண்டும் என்று அப்போது யாரும் கேட்கவில்லை என்றார்.
விளக்கம் வேண்டும்
அதைடுத்து நீதிபதிகள், பொருளாதார ரீதியில் பின்தங்கிய உயர்வகுப்பினருக்கு 10 சதவீத இடஒதுக்கீட்டை சேர்க்கும்போது, மொத்த இடஒதுக்கீடு 59.5 சதவீதமாகி விடுகிறது. அதாவது, 50 சதவீத இடஒதுக்கீட்டு வரம்பை மீறும் வகையில் உள்ளது. எனவே இதுகுறித்து மத்திய அரசு இன்று (புதன்கிழமை) விளக்கம் அளிக்க வேண்டும் என்று கூறி, விசாரணையை தள்ளிவைத்தனர்.