

பெரம்பலூர்,
பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே மேலஉசேன் நகரம் கிராமத்தை சேர்ந்தவர் ராமதாஸ் (வயது 73). விவசாயி. இவரது வீட்டின் அருகே அரசுக்கு சொந்தமான இடத்தில் அல்லிநகரம் ஊராட்சியின் ஆழ்குழாய் கிணறு உள்ளது. இவர் வீட்டுக்கு செல்லும் பாதையில் மின்மோட்டார் அறை இருப்பதாக கூறப்படுகிறது.
இந்தநிலையில் ஆழ்குழாய் கிணறு பழுதடைந்ததால் அதனருகே புதிதாக ஆழ்குழாய் கிணறு அமைக்கப்பட்டு, நேற்று முன்தினம் அல்லிநகரம் ஊராட்சி ஊழியர்கள் மின்மோட்டார் பொருத்தும் பணியில் ஈடுபட்டனர். அவர்களிடம் ராமதாஸ், அவரது மனைவி பூங்கொடி (56), அவர்களது மருமகள்கள் தமயந்தி, தங்கலட்சுமி (33) ஆகியோர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இருப்பினும் மின்மோட்டார் பொருத்தும் பணி நடந்தது.
இதனால் ஆத்திரம் அடைந்த தங்கலட்சுமி, பூங்கொடி ஆகியோர் மண்எண்ணெய் ஊற்றி தீக்குளித்தனர். இதில் படுகாயம் அடைந்த அவர்கள் தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். நேற்று அதிகாலை பூங்கொடி சிகிச்சை பலனின்றி இறந்தார். தங்கலட்சுமி அரியலூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இதுகுறித்த புகாரின்பேரில் ஊராட்சி செயலாளர், வட்டார வளர்ச்சி அலுவலர் உள்பட 12 பேர் மீது குன்னம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.