பிரதமர் மோடி வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து வியாபாரி தீக்குளித்து தற்கொலை

பிரதமர் மோடி வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து வியாபாரி உடலில் மண்எண்ணெய் ஊற்றி தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டார்.
பிரதமர் மோடி வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து வியாபாரி தீக்குளித்து தற்கொலை
Published on

பவானி,

ஈரோடு அருகே உள்ள சித்தோடு சத்தி மெயின்ரோட்டில் வசித்து வந்தவர் தர்மலிங்கம் (வயது 24). திருமணம் ஆகாதவர். இவருடைய பெற்றோர் இறந்துவிட்டனர்.

இதனால் தனது பாட்டி ரத்தினாம்பாள் என்கிற சுப்புலட்சுமியின் பராமரிப்பில் வளர்ந்து வந்தார். தர்மலிங்கம் பிளாஸ்டிக் பொம்மைகளை மொத்தமாக வாங்கி அதை கோவில் திருவிழா மற்றும் சாலையோரத்தில் வைத்து விற்பனை செய்து வந்தார்.

பெற்றோர் இறந்ததன் காரணமாக தர்மலிங்கம் கடந்த 2 ஆண்டுகளாக வாழ்க்கையில் வெறுப்படைந்த நிலையிலேயே காணப்பட்டு வந்தார். பொம்மைகளை விற்கும் ஊரிலேயே சாப்பிட்டுவிட்டு அங்கேயே ஏதாவது ஒரு இடத்தில் தங்கி வந்தார். 15 நாட்களுக்கு ஒருமுறை தான் வீட்டுக்கு வருவார். வீட்டிற்கு வந்தாலும், யாரிடமும் சரியாக பேசாமல் இருந்து வந்துள்ளார்.

இந்த நிலையில் கடந்த 3 நாட்களுக்கு முன்பு வீட்டுக்கு வந்துள்ள அவர் வியாபாரத்திற்கு செல்லவில்லை. காவிரி மேலாண்மை வாரியம் பிரச்சினை குறித்த செய்திகள் மற்றும் போராட்டங்களை டி.வி.யில் பார்த்து வந்துள்ளார். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காதது அவரது மனதில் மேலும் வேதனையை ஏற்படுத்தியது.

இதற்கிடையே நேற்று பிரதமர் மோடி சென்னை வருவதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. இதனால் அவரது வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்தும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காததை கண்டித்தும் தனது வீட்டு சுவரில் கலர் சாக்பீசால் மத்திய அரசே, கர்நாடக அரசே காவிரி நீர் தமிழ்நாட்டின் உயிர்நீர்.... தமிழகம் வரும் நரேந்திர மோடிக்கு என்னுடைய எதிர்ப்பு இது. பா.தர்மலிங்கம் என்று எழுதி இருந்தார்.

நேற்று முன்தினம் இரவு வீட்டில் அனைவரும் தூங்கி விட்டார்கள். மனம் உடைந்து காணப்பட்ட தர்மலிங்கம் தற்கொலை செய்துகொள்வதற்காக நேற்று அதிகாலை 3 மணி அளவில் எழுந்து மண்எண்ணெய் கேனுடன் வீட்டுக்கு வெளியே வந்தார். பின்னர் உடலில் மண்எண்ணெயை ஊற்றி தீக்குளித்தார். இதனால் உடல் கருகிய நிலையில் அலறி துடித்தார். அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடோடி வந்தார்கள்.

இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர்கள் உடனே தர்மலிங்கத்தின் மீது பற்றி எரிந்த தீயை தண்ணீரை ஊற்றி அணைத்தனர். பின்னர் அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். எனினும் சிகிச்சை பலனின்றி தர்மலிங்கம் நேற்று இறந்தார்.

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

பா.ம.க. இளைஞரணி தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் எம்.பி. வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

காவிரி பிரச்சினையில் தமிழ்நாட்டிற்கு மிகப்பெரிய துரோகம் இழைக்கப்பட்டிருப்பது உண்மை தான். அதற்கு எதிராக கடுமையாக போராடித் தான் காவிரி உரிமைகளை மீட்டெடுக்க வேண்டுமே தவிர, தீக்குளிப்பு போன்ற செயல்களில் ஈடுபடுவது முறையல்ல. எனவே, காவிரியில் நமது உரிமைகளை வென்றெடுக்க தொடர்ந்து போராடவேண்டும். மாறாக யாரும் தீக்குளிப்பு போன்ற செயல்களில் ஈடுபடக்கூடாது.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com